புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பாரதிதாசன் நகர் பகுதியில் அரசு பள்ளி, மருத்துவமனை ஆகியவை அமைந்துள்ளது. கடலை மில் ஒன்றும் அமைந்துள்ளதால் அதற்கும் பலர் வேலைக்கு சென்றுவருகின்றனர்.
இந்நிலையில், அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டிக்கொடுக்க ஒதுக்கப்பட்ட இடத்தில் டாஸ்மாக் கடை கட்டுமானப்பணிகள் நடந்துவருகின்றன.
இப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்தால், பள்ளி மாணவ மாணவிகள், பெண்கள் என ஆகியோர் கடுமையாக பாதிக்கப்படுவர் எனவும் எனவே அப்பகுதியில் டாஸ்மாக் கடை வேண்டாம் எனவும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால், டாஸ்மாக் கடை கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருவதால், பாரதிதாசன் நகர்ப் பகுதி பெண்கள் கழுத்தில் மதுபாட்டில் மாலை அணிந்துகொண்டு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்று மனு ஒன்றை அளித்தனர்.
மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பாரதிதாசன் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும் எனவும் இல்லையெனில் தொடர் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் எனவும் அம்மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
மக்கள் வேண்டாம் எனக்கூறும் டாஸ்மாக் கடையை, அமைக்க துடிக்கும் அரசின் செயல்பாடு, மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.