எனக்கு அரசியல் நாட்டமெல்லாம் இல்லிங்க! நான் ஒரு ஆயுதம் அவ்வளவே: அன்று சொன்ன கமல் இன்று மாறியது ஏன்?

First Published Nov 20, 2017, 3:09 PM IST
Highlights
Kamal said I do not have a political career I have a weapon


சினிமாவின் வழியாகத்தான் அரசியலுக்குள் அடியெடுத்து வைக்கிறார் கமல். ஒரு நடிகர் எனும் அடையாளத்துடன் தான் அவர் நம்மை அணுகிட அரசியல் ரீதியாகவும் அனுமதிக்கிறோம். கமல்ஹாசன் மீதான நம்பகத்தன்மையை நாம் நிர்ணயிக்க அவரதுசினிமாக்களும், அதில் அவர் பேசிய வசனங்களும், அவர் நடித்த காட்சிகளுமே பெருவாரியாக கைகொடுக்கும். 

இன்று கூட மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கமலை விளாசித்தள்ளும் போக்கில் ‘இன்னமும் குணாவாகவே இருக்கிறார் கமல்ஹாசன்.’ என்றுதான் சாடியிருக்கிறார். அதாவது கமலை பைத்தியக்காரன், மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பவராகவே சித்தரித்திருக்கிறார் அமைச்சர். 

இந்நிலையில் அரசியல் அரிதாரம் பூசும் கமலின் ஆளுமையை அவரது  சினிமா காட்சிகளும், வசனங்களும்தான் நிர்ணயிக்கும் என்றால், இதோ ஒரு முரண்பட்ட விஷயத்தை கவனியுங்கள். 

மிகப்பெரிய பாராட்டைப் பெற்ற கமல்ஹாசனின் படங்களுள் முக்கியமானது அன்பே சிவம். அழகான கமல்ஹாசன் தன்னை அவலட்சணமாக்கிக் கொண்டு ‘சமதர்மம், கம்யூனிசம், சகோதரத்துவம், ஜீவகாருண்யம், மன்னிக்கும் எனும் மகா குணம்.’ ஆகியவற்றை வலியுறுத்திய படம் அது. அந்த படத்தில் கமல் பேசும் சமத்துவ டயலாக்குகளை எடுத்து வைத்துக் கொண்டு கூட கமலுக்கான அரசியல் எழுச்சியை கட்டமைக்கிறார்கள் அவரது ரசிக முன்னோடிகள். 

இந்நிலையில் அதேபடத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் வரும் காட்சி மற்றும் வசனம் இது. அதில் தனக்கு அரசியல் வேண்டாம் என்றும், நல்லது நடக்க இருப்பதற்கு காரணமான ‘டூல்’ மட்டுமே தான் என்றும் கமல் கூறும் காட்சி ஒன்று உள்ளது. 

அதில், மாதவன் - கிரண் திருமண மண்டபத்திலிருந்து கமல்ஹாசனை வெளியேற சொல்லி வர்புறுத்துகிறார் நாசர். ஆனால் அதற்கு ஒரு  நிபந்தனை விதிக்கும் கமல், தொழிலாளர்களுக்கான மாத சம்பளத்தை உயர்த்தி தரும் ஒப்பந்த படிவத்தில் அப்போதே கையெழுத்திட்டால் அந்த இடத்திலிருந்து தான் நகர்வதாக உறுதியளிக்கிறார். இந்த இடத்தில்தான் அரசியலை அவர் வெறுத்தும், ஒதுக்கியும் பேசும் டயலாக் வருகிறது. 
அதில் நாசர் “இனி தொழிலாளர்கள் மத்தியில நீ பெரிய ஹீரோதான் வாழ்க! அப்டியே அரசியலுக்கும் போயிடு. ரொம்ப நல்லா இருக்கும்.” என்கிறார். 

அதை மறுத்துப் பேசும் கமல் “அய்யோ அந்த நாட்டமெல்லாம் இல்லிங்க எனக்கு. நான் ஒரு டூல் - ஆயுதம் அவ்வளவுதான். ஆணி அடிச்சு முடிச்சதும் சுத்தியலை தூக்கி ஓரமா வெச்சுடணும், கதிர் அறுத்து முடிச்சதும் அருவாளையும் அதைத்தான் செய்யணும்.” என்பார். 

சுத்தியல், கதிர் அரிவாள் என்று இதில் கம்யூனிஸத்தை பேசியிருக்கிறார் என்பது தனி கதை. 

இருந்தாலும் கூட கமர்ஷியல்தனம் தாண்டி முழுக்க முழுக்க அடர்த்தியான அர்த்தத்தை தாங்கி வந்த ‘அன்பே சிவம்’ படத்தில் இப்படி அரசியலை வெறுத்த கமல் எப்படி ‘நான் அரசியலுக்கு வந்தே தீருவேன்.’ என்று இப்படி மாறியிருக்கிறார் என்பது ஆச்சரியமே!
சினிமா வேறு, வாழ்க்கை வேறு! என்று சொல்லி கமல் எஸ்கேப் ஆக முடியாது. காரணம் சினிமாதான் அவரது வாழ்க்கையே!
என்ன சொல்றீங்க கமல்?

click me!