
பெண்களை பாதுகாப்போம் என மோடி கூறி வந்த நிலையில் தற்போதைய சூழலில் பா.ஜ.க தலைவர்களிடமிருந்து பெண்களை பாதுகாக்க வேண்டியது உள்ளது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
மத்திய பா.ஜ.க ஆட்சியில் எல்லா ஜனநாயக அமைப்புகளும் நெருக்கடிக்கு உள்ளாவதாக கூறி அரசியல் சாசனத்தை காப்பாற்றுங்கள் என்ற நிகழ்ச்சியை காங்கிரஸ் கட்சி டெல்லியில் நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.
அப்போது சுப்ரீம் கோர்ட் உள்ளிட்ட நாட்டின் ஜனநாயக அமைப்புகள் நெருக்கடிக்கு உள்ளாகின்றன. பாராளுமன்றத்தை அரசே முடக்குகிறது. என்னை 15 நிமிடம் பேச அனுமதித்தால் நாடாளுமன்றத்தில் இருந்து மோடி வெளியே ஓடி விடுவார். ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் கொண்டவர்கள் அரசின் எல்லா நிறுவனங்களிலும் நிரப்பப்படுகின்றனர் என குற்றம்சாட்டினார்..
நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஒடுக்கப்பட்டவர்கள், சிறுபாண்மையினர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றனர். ஆனால், அடுத்த முறையும் பிரதமராவது எப்படி என மோடி சிந்தித்துக்கொண்டு இருக்கிறார். தேர்தலுக்கு முன்னர் அளித்த வாக்குறுதிகள் பற்றி மோடி ஏன் வாய்திறப்பது இல்லை? என கேள்வி எழுப்பினார்.
பெண்களை பாதுகாப்போம் என மோடி கூறி வந்தார், தற்போதைய சூழலில் பா.ஜ.க தலைவர்களிடமிருந்து பெண்களை பாதுகாக்க வேண்டியது உள்ளது. நாட்டில் நிலவும் பிரச்சனைகளை கையாளும் திறன் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே உண்டு என ராகுல் காந்தி தெரிவித்தார்.