அனுமதியின்றி பல்க் எஸ்.எம்.எஸ். அனுப்பியது எப்படி?... உயர் நீதிமன்றம் கேள்வி!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Mar 31, 2021, 07:27 PM IST
அனுமதியின்றி பல்க்  எஸ்.எம்.எஸ். அனுப்பியது எப்படி?... உயர் நீதிமன்றம் கேள்வி!

சுருக்கம்

பாஜக சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கட்சியினர் மூலம்  சேகரிக்கப்பட்ட மொபைல் எண்களை ஏஜென்சிகளுக்கு அளித்து அதன் மூலம் பிரச்சாரம் செய்து கொண்டதாகத் தெரிவித்தார்.

புதுவையில் பா.ஜ.க சார்பில் ஆதார் ஆணையத்தில் இருந்து வாக்காளர்களின் மொபைல் எண்களைப் பெற்று,  தொகுதி வாரியாக வாட்ஸ் ஆப் குரூப்கள் ஆரம்பித்து, அதன் வழியாக தேர்தல்  பிரச்சாரம் செய்து  வருவது குறித்து சிறப்பு புலனாய்வு  விசாரணை குழுவை அமைத்து விசாரிக்க கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்க புதுவை தலைவர் ஆனந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது, புகார் குறித்து சைபர் குற்றப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும்,   அனுமதிப்பெறாமல் எஸ்.எம்.எஸ். அனுப்பியது குறித்து  விளக்கம் கேட்டு பா.ஜ.விற்கு  நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, புதுவை வாக்காளர்களின் மொபைல் எண்கள் பாஜகவினருக்கு எப்படி கிடைத்தது என விசாரிக்க ஆதார் ஆணையத்துக்கு உத்தரவிட்ட   நீதிபதிகள், இந்த முறைகேடு தொடர்பாக ஆதார் ஆணையம் மற்றும் தேர்தல் ஆணையம் உரிய விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை இன்றைக்கு தள்ளிவைத்தனர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஆதார் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆதார் விவரங்கள் திருடப்படவில்லை  என்றும் ஆதார் தகவல்கள் கசியவில்லை என்றும் பதில் மனு தாக்கல் செய்தார். தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தேர்தல் ஆணையத்தின் நோட்டீசுக்கு பா.ஜ. அளித்த விளக்கத்தை நிராகரித்துள்ளதாகவும்,  இதுகுறித்து காவல்துறை விசாரித்து வருவதாகவும் குறிப்பிட்டார். 

இதுசம்பந்தமான முழுமையான விசாரணை அறிக்கை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இன்று அல்லது நாளை தேர்தல் ஆணையம் உரிய முடிவு எடுக்கும் என்றும் தெரிவித்தார். அதேபோல, ஏஜெண்ட்கள் மூலம் எஸ்.எம்.எஸ். அனுப்பிய வகையில் 4.3 லட்சம் ரூபாய் செலவழித்ததாக, பா.ஜ. கட்சி வேட்பாளர்களின் பெயரில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பாஜக சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கட்சியினர் மூலம்  சேகரிக்கப்பட்ட மொபைல் எண்களை ஏஜென்சிகளுக்கு அளித்து அதன் மூலம் பிரச்சாரம் செய்து கொண்டதாகத் தெரிவித்தார்.பா.ஜ. தரப்பு பதில் மனு தங்களுக்கு இன்று காலை தான் கிடைத்ததாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தனது நடவடிக்கையை தொடரலாம் என உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்தனர்.

முன்னதாக, தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறாமல் வாக்காளர்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பியது எப்படி என புதுவை பா.ஜ.வுக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், நாட்டின் அடிப்படை ஜனநாயக உரிமையான வாக்குரிமையை மக்கள் நேர்மையாக, நியாயமாக செலுத்த அனுமதிக்கப்பட்டதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர்.பல பிரச்சனைகள் இருந்த போதும், நம்பகத்தனமையை ஏற்படுத்த வேண்டும் எனவும், நம்பகத்தன்மை இழந்தால் உலக நாடுகள் மத்தியில் நம் நாட்டின் மதிப்பு வீழ்ந்து விடும் எனவும் குறிப்பிட்ட நீதிபதிகள், உலக நாடுகளுக்கு இந்தியா உதாரணமாக திகழ வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.
 

PREV
click me!

Recommended Stories

Sanatana Dharma: சனாதனத்தை ஒழிக்கவே வந்துள்ளோம்.. தவெக எம்.எல்.ஏ முஸ்தபா பேச்சு.. பொங்கியெழுந்த அண்ணாமலை!
DA Hike: அடுத்தடுத்து சிக்சர் அடிக்கும் முதல்வர் விஜய்..! அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 60% உயர்வு..