
ஆளுநருக்கு மீண்டும் மசோதா அனுப்பப்படும் நிலையில், ஆளுநர் இசைவு தெரிவிக்காமல் திருப்பி அனுப்ப முடியாது என்பது உண்மைதான். ஆனால், அந்த மசோதா சட்டமாகிற நிலையில், அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராகவோ, நீதிமன்றத்தின் அதிகாரங்களை குறைக்கும் விதமாகவோ இருப்பதாகவோ கருதினால் குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பலாம் என்றே சொல்லப்பட்டிருக்கிறது என்று தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீட் விலக்கு' கோரி தமிழக சட்டமன்றம் இயற்றிய மசோதாவை, இசைவு தெரிவிக்காமல் சபாநாயகருக்கு திருப்பி அனுப்பியுள்ளதோடு, அதற்கான காரணங்களையும் விரிவாக குறிப்பிட்டுள்ளார் தமிழக ஆளுநர். இந்த மசோதாவையும், இந்த மசோதாவுக்கு காரணமாக அமைந்த தமிழக அரசு அமைத்திருந்த உயர்மட்ட குழுவின் அறிக்கையையும், நீட் தேர்வுக்கு முன்பு மருத்துவ கல்வி அனுமதியில் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவ, மாணவிகளுக்கான சமூக நீதி கடைப்பிடிக்கப்பட்ட விதத்தையும் ஆய்வு செய்ததில் இந்த மசோதாவானது தமிழக கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்களின் நலனுக்கு எதிராக உள்ளது என்றும், ஆகவே நீட் விலக்கு மசோதாவை உரிய காரணங்களோடு சபாநாயகருக்கு திருப்பி அனுப்புவதாகவும், சட்டசபை இந்த மசோதாவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அதோடு, வேலூர் கிருஸ்துவ மருத்தவ கல்லூரி (எதிர்) இந்திய அரசாங்கம் வழக்கில், சமூக நீதி கண்ணோட்டத்தோடு விரிவாக ஆய்வு செய்து ஏழை மாணவர்கள் மருத்துவ படிப்பில் அனுமதி பெறுவதற்கும், சமூக நீதியின் மேம்பாட்டிற்கும் நீட் தேர்வு அவசியம் தேவையானது என்று உறுதிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சில மூத்த ஊடகவியலாளர்களும், அரசியல் கட்சி தலைவர்களும், ஆளுநர் மசோதாவை திருப்பி அனுப்பியதற்கு தங்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளதோடு, மீண்டும் சட்டமன்றம் இந்த மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினால் ஆளுநர் இசைவு தெரிவித்தே ஆக வேண்டும் என்றும் அரசியலமைப்பு சட்ட பிரிவு 200- ன் படி திருப்பி அனுப்ப அதிகாரம் இல்லை என்றும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
ஆனால், அரசியலமைப்பு சட்ட பிரிவு 200ன் படி, ஆளுநருக்கு மீண்டும் மசோதா அனுப்பப்படும் நிலையில், ஆளுநர் இசைவு தெரிவிக்காமல் திருப்பி அனுப்ப முடியாது என்பது உண்மைதான். ஆனால், அந்த மசோதா சட்டமாகிற நிலையில், அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராகவோ, நீதிமன்றத்தின் அதிகாரங்களை குறைக்கும் விதமாகவோ இருப்பதாகவோ கருதினால் குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பலாம் என்றே சொல்லப்பட்டிருக்கிறது. இது தெரியாமல் அல்லது தெரிந்தும் தெரியாதது போல் சில தமிழக அரசியல்வாதிகள் மேலும் மேலும் குழப்பத்தை விளைவிப்பது சமூகநீதிக்கு கேடு விளைவிக்கும் செயல். நீட் தேர்வுக்கு பின்னரே தமிழக கிராமப்புற மாணவர்களும், ஏழை,எளிய மாணவர்களும், அரசு பள்ளி மாணவ மாணவிகளும் அதிக அளவில் மருத்துவ படிப்பில் அனுமதிக்கப்படுகின்றனர் என்பது ஆதாரபூர்வமாக நிரூப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தை மேலும் பெரிதுபடுத்தி தமிழக மாணவ, மாணவிகளின் நலனுக்கு எதிராகச் செயல்படுவது முறையல்ல.” என்று அறிக்கையில் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.