பரமக்குடியில் பவுண்டரி அடிப்பாரா சதன் பிரபாகரன்..? நங்கூரம்போட்டு நம்பிக்கையோடு காத்திருக்கும் அதிமுக..!

By Thiraviaraj RMFirst Published Mar 15, 2021, 2:20 PM IST
Highlights

2007-ல் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் வென்று, கூட்டுறவுத்துறை துணைப் பதிவாளர் பணி கிடைத்தும், கட்சிப்பணிக்காக வேலைக்குச் செல்லவில்லை. 

கடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பரமக்குடி சிட்டிங் எம்.எல்.ஏ., சதன் பிரபாகரன் மீண்டும் சீட்டைப்பிடித்து தலைமையிடம் தனக்குள்ள நன்மதிப்பை நிரூபித்து இருக்கிறார். 

​தென்மாவட்டங்களில் உள்ள சட்ட மன்றத் தொகுதிகளில் எப்போதும் எதிர்பார்க்கப்படுவது பரமக்குடி தொகுதி. இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி ரிசர்வ் தொகுதி. 1977ம் ஆண்டில் இருந்து 2019 வரை 11 முறை நடந்த தேர்தல்களில், 8 முறை அதிமுக வென்றுள்ளது.  ஆகவே இது அதிமுகவின் கோட்டை 2011, 2016, 2019 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தலில் பரமக்குடியில் அதிமுகவே வென்றது. ஆகவே இங்கு மற்ற கட்சிகளை விட அதிமுக வேட்பாளராக யார் முன்னிருத்தப்படுகிறார் என்கிற எதிர்பார்ப்பு எழுவதுண்டு. 

ஏனென்றால் இங்கு அதிமுக சார்பாக போட்டியிட எப்போதும் அரை டஜன் பேர் தயாராக இருப்பர். இந்த தொகுதியில் 2011ல் ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைந்த போது, அதிமுக சார்பில் மருத்துவரான எஸ்.சுந்தர்ராஜன் வெற்றி பெற்றார். அதன்பிறகு 2016ல் டாக்டர். சி.முத்தையா வெற்றி பெற்றார். ஆனால், முத்தையா 2017ல் டி.டி.வி.தினகரனுடன் சேர்ந்ததால் எம்.எல்.ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து 2019ல் இடைத்தேர்தல் நடந்தது. இடைத்தேர்தலில் தனக்கு சீட் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த டாக்டர் சுந்தர் ராஜனுக்கு பதில்  சதன் பிரபாகர் வேட்பாளராக களமிறக்கப்பட்டார்.அப்போது அதிமுக சார்பில் சதர்ன் பிரபாகர் வெற்றி பெற்றார். அமமுக சார்பில் போட்டியிட்ட முத்தையா மூன்றாவது இடத்தையே பிடித்தார். 

இப்போதும் சீட்டை எதிர்பார்த்துக் காத்திருந்த முன்னாள் அமைச்சர் சுந்தர்ராஜன், அதிமுக தலைமை சதன் பிரபாகரனுக்கு கொடுத்து வரும் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டு தனது ஜாகையை திமுகவுக்கு மாற்றிக் கொண்டார். பி.இ., எம்.பி.ஏ., பி.எல்., பட்டம் பெற்றுள்ள இவர் தெற்கு ரயில்வே திருச்சி கோட்டத்தில் செக்ஷன் கண்ட்ரோலராக பணியாற்றி 2006-ல் கட்சிப்பணிக்காக வேலையைத் துறந்தார். 2007-ல் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் வென்று, கூட்டுறவுத்துறை துணைப் பதிவாளர் பணி கிடைத்தும், கட்சிப்பணிக்காக வேலைக்குச் செல்லவில்லை.  சதன் பிரபாகரன் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைத்தால் அமைச்சராகும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.  

​அமமுக கூட்டணியில் பரமக்குடி சட்டமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் விளத்தூர் கு.சந்திரபிரகாஷ் களமிறங்குகிறார். திமுக சார்பில் செ.முருகேசன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சசிகலா களத்தில் இறங்கி விட்டார். ஆனாலும், எந்த வேலையாக இருந்தாலும் களத்தில் இறங்கி வேலை செய்து சுறுசுறுப்பாக இயங்குவதாலும் சதன் பிரபாகரனுக்கு தொகுதி முழுவதும் நற்பெயர் உள்ளது. சாக்கடை அடைத்தாலும், ஊருக்குள் நிலவும் எந்த பிரச்னையாக இருந்தாலும் தான் எம்.எல்.ஏ என்பதையும் மறந்து அவராகவே வேலை செய்வதை பார்த்து சதன் பிரபாகரை மாற்றுக் கட்சியினரும் பாராட்டி வருகின்றனர்.

இந்த முறை மற்ற தொகுதிகளில் பலத்த போட்டி இருந்தாலும் பரமக்குடியில் அதிமுக நிச்சயம் வெற்றிபெறும் என்கிறார்கள். ஆக இந்த முறையும் அதிமுக வெற்றிபெற்றால் தொடர்ந்து நான்காவது முறையாக வெற்றி பெற்று பவுண்டரி அடிக்கும் அதிமுக எனக் கூறுகிறார்கள்.

click me!