மே மாதத்துக்கு பிறகு எடப்பாடி அரசு நீடிக்குமா..? அதிமுகவுக்கு கண்ணாமூச்சி காட்டும் இடைத்தேர்தல்!

By Asianet TamilFirst Published Mar 24, 2019, 1:09 PM IST
Highlights

வரும் மக்களவைத் தேர்தலைத் தாண்டி எடப்பாடி பழனிச்சாமி அரசின் தலைக்கு மேல் கத்தி போல் தொங்கிக்கொண்டிருக்கிறது இடைத்தேர்தல்கள். இந்த இடைத்தேர்தலில் 9 தொகுதிகளில் வென்றால் எஞ்சிய இரண்டு ஆண்டு காலத்தை எந்தப் பிரச்னையும் இல்லாமல் எடப்பாடியால் ஓட்ட முடியும்.  
 

2016 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 136 தொகுதிகளை கைப்பற்றியது. திமுகவும் அதன் கூட்டனி கட்சிகளும் 98 இடங்களில் வெற்றி பெற்றன. இந்நிலையில் முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணமடைந்ததால், அவர் வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதி காலியானது. 2017 இறுதியில் அங்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட தினகரன் வெற்றி பெற்றார். இதன் காரணமாக அதிமுக பலம் 135 ஆக குறைந்தது. 
அதற்கு முன்பே தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர், எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் பொறுப்பிலிருந்து மாற்ற வேண்டும் என்று ஆளுநரிடம் கொடுத்த மனுவின் காரணமாக, 18 பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்கள். அதனால் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பலம் 117 ஆக குறைந்தது.இவைதவிர திருப்பரங்குன்றம் எம் எல்.ஏ மறைவால் அதிமுக எண்ணிக்கை 116 ஆக குறைந்தது. திருவாரூர் தொகுதி எம்எல்ஏ கருணாநிதியின் மறைவால் திமுக கூட்டணி பலம் 97 ஆக குறைந்தது.
இதனையடுத்து ஓசூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ பாலகிருஷ்ணாவின் பதவி பறிப்பாலும் சூலூர் தொகுதி எம்எல்ஏ ககனராஜ் மறைவாலும் தற்போது அதிமுக எண்ணிகை 114 ஆக குறைந்துவிட்டது. இந்த 114 எம்எல்ஏக்களில் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோர்  தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களாக உள்ளனர்.

தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகிய மூன்று எம்எல்ஏக்களில் கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகியோர் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிராகத் திரும்பியுள்ளனர். இதன் காரணமாக இந்த எம்எல்ஏக்களின் எண்ணிக்கையைக் குறைத்தால், தற்போதைய நிலையில் அதிமுக அரசுக்கு 109 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு மட்டுமே உள்ளது.
தற்போதைய நிலையில்  தமிழக சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் பலம் 212 மட்டுமே. இந்த எண்ணிக்கையில் 107 உறுப்பினர்களுக்கு அதிகமாக 2 உறுப்பினர்கள் இருப்பதால், எடப்பாடி அரசு நூலிழையில் தப்பித்துள்ளது. 18 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்ற பிறகு சபை எண்ணிக்கை 230 ஆக அதிகரிக்கும். அப்போது 116 உறுப்பினர்களை எடப்பாடி அரசு வைத்திருந்தால் மட்டுமே ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள முடியும்.
அதற்கு குறைந்தபட்சம் 8 தொகுதிகளில் வெற்றி பெற்றாக வேண்டும். எஞ்சிய 4 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும்போது எடப்பாடி அரசு கூதலாக ஒரு தொகுதியில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆட்சியைத் தக்க வைக்க முடியும். அதேவேளையில் அரசுக்கு எதிராகவும் தினகரன் அணியிலும் இருக்கும் அதிமுக எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தால்கூட, எடப்பாடி அரசு குறைந்தபட்சம் 4 முதல் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுதான் ஆக வேண்டும். 
இதன் அடிப்படையில் மே மாத தேர்தல் முடிவுக்கு பிறகே எடப்பாடி அரசு நீடிக்குமா இல்லையா என்பது தெரியவரும்.

click me!