எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி நீடிக்குமா..? இன்று பிற்பகலுக்கு மேல் தெரியும்... 9 தொகுதிகளுக்கும் குறைவாக வென்றால் சிக்கல்!

By Asianet TamilFirst Published May 23, 2019, 6:23 AM IST
Highlights

மாறாகத் தேர்தல் முடிவுகள் வந்தாலோ,  9 தொகுதிகளுக்கும் குறைவாக அதிமுக வென்றாலோ, அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சரிக்கட்ட வேண்டிய நிலை வரும். ஒருவேளை அதிமுக 4 தொகுதிகளுக்கும் குறைவாக வெற்றி பெற்றால், அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சரிகட்டினால்கூட, எதிர்க்கட்சிகள் சம நிலையில் இருக்கும்.
 

எஞ்சிய இரண்டு ஆண்டு கால அதிமுக ஆட்சியின் ஆயுள் காலத்தைத் தீர்மானிக்கும் 22 சட்டப்பேரவைத் தொகுதிகளின் முடிவுகள் இன்று எண்ணப்பட உள்ளன. தேர்தல் முடிவுக்கு பிறகு அதிமுக ஆட்சி சிக்கலின்றி தொடருமா இல்லையா என்பது தெரியவரும்.


தமிழகத்தில் காலியாக இருந்த 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து நடத்தப்பட்டது. இந்தத் தொகுதிகளில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற உள்ளது. தமிழக சட்டப்பேரவையின் மொத்த பலம் 234. ஆனால், தற்போது அவையின் பலம் 212 மட்டுமே.  அதிமுகவுக்கு 114 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. ஆனால், அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 3 பேர், இரட்டை இலையில் நின்று வெற்றி பெற்ற மூன்று உறுப்பினர்கள், சபாநாயகரையும் சேர்த்துதான் 114 உறுப்பினர்கள் அதிமுகவுக்கு உள்ளனர்.


ஆனால், இந்த எம்.எல்.ஏ.க்களில் 3 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள், கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகியோர் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டிருப்பதால், அதிமுகவுக்கு உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 109 ஆக உள்ளது. தற்போது அவையின் பலம் 212 ஆக இருப்பதால், சிக்கல் இல்லாமல் ஆட்சி நடைபெற்றுவருகிறது. ஆனால், இன்று வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு அவையின் பலம் 234 ஆக உயர்ந்துவிடும்.
அப்போது 118 உறுப்பினர்களை வைத்திருக்கும் கட்சியே ஆட்சியில் நீடிக்க முடியும். அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களைக் கழித்துவிட்டால், அதிமுக 22 தொகுதிகளில் 9 தொகுதிகளில் கட்டாயம் வெல்ல வேண்டும். அப்படி வென்றுவிட்டால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு எந்த சிக்கலும் இன்றி எஞ்சிய இரண்டு ஆண்டு காலத்தை ஓட்டிவிடலாம். மாறாகத் தேர்தல் முடிவுகள் வந்தாலோ,  9 தொகுதிகளுக்கும் குறைவாக அதிமுக வென்றாலோ, அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சரிக்கட்ட வேண்டிய நிலை வரும். ஒருவேளை அதிமுக 4 தொகுதிகளுக்கும் குறைவாக வெற்றி பெற்றால், அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சரிகட்டினால்கூட, எதிர்க்கட்சிகள் சம நிலையில் இருக்கும்.
எனவே ஆட்சியைச் சிக்கலின்றி தொடர அதிமுக 9 தொகுதிகளில் வெல்வது அவசியம். இதுபோன்ற ஓர் அரசியல் பரபரப்பான தருணத்தில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட இருப்பதால், தமிழக அரசியலில் மாற்றம் நிகழுமா அல்லது அதே நிலை நீடிக்குமா என்பது இன்று தெரிய வர உள்ளது. 

click me!