திருவொற்றியூர், குடியாத்தம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்..? பரபரப்பாகும் தேர்தல் ஆணையம்..!

By Asianet TamilFirst Published Sep 5, 2020, 8:42 AM IST
Highlights

காலியாக உள்ள திருவொற்றியூர், குடியாத்தம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுமா என்பது குறித்து தமிழக தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். 

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் காலியாக உள்ள சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதை கருத்தில் கொண்டு செப்டம்பர் 7 வரை இடைத்தேர்தல் கிடையாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேலும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் பீகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதால், அண்மையில் கொரோனா காலத்தில் தேர்தல் நடத்துவது குறித்து வழிகாட்டு நடைமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்தது.


இந்நிலையில் பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பிறகு தேர்தல் ஆணையம் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டது, அதில், “பீகார் சட்டப்பேரவைத் தேர்தலோடு சேர்த்து நாட்டில் காலியாக உள்ள நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. பருவ மழை, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சட்டப்பேரவை இடைத்தேர்தல்களை ஒத்தி வைக்க வேண்டும் என்று சில மாநிலங்களின் தலைமை செயலாளர்களும் தேர்தல் அதிகாரிகளும் கேட்டுக்கொண்டனர்.


என்றாலும், பீகார் சட்டப்பேரவை தேர்தலோடு, காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான உரிய அறிவிப்பு உரிய நேரத்தில் வெளியிடப்படும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் திருவொற்றியூர், குடியாத்தம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளும், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியும் காலியாக உள்ளன. தேர்தல் ஆணைய அறிவிப்பில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டப்பேரவை தொகுதியின் பெயர்கள் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது. 
கடந்த பிப்ரவரியில் காலியான குடியாத்தம், திருவொற்றியூர் தொகுதிகள் மட்டுமே இடைத்தேர்தல் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. தற்போதைய சட்டப்பேரவைக்கு ஆயுட்காலம் இன்னும் 7 மாதங்களே இருப்பதால், இந்தத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறுகையில், “சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவேண்டிய ஓராண்டுக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்றால், அதை தலைமை தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்ய வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார். வழக்கமாக ஓராண்டுக்குள் சட்டப்பேரவைக் காலம் முடியும்பட்சத்தில் அந்த மாநிலத்தில் இடைத்தேர்தல் நடத்துவதை தேர்தல் ஆணையம் தவிர்த்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!