7 பேர் விடுதலை விவகாரம்... முதல்வரை ரவுண்டு கட்டும் எதிர்க்கட்சிகள்... வாய்த் திறப்பாரா எடப்பாடி பழனிச்சாமி?

By Asianet TamilFirst Published Oct 19, 2019, 8:52 AM IST
Highlights

அரசியல் கட்சிகள் இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் உண்மை நிலையை விளக்க வேண்டும் என்று கோரிவரும் நிலையில், இது பற்றி முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி எதுவும் தெரிவிக்கவில்லை. அந்தச் செய்திக்கு மறுப்பும் தெரிவிக்கவில்லை. இடைத்தேர்தல் பிரசாரம் இன்று ஓய்வடைய நிலையில், இதைப் பற்றி முதல்வர் விளக்குவாரா அல்லது தேர்தல் முடிந்த பிறகுதான் விளக்கம் அளிப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 
 

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரை விடுதலை செய்ய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடன் ஆட்சேபித்துவிட்டதாக வெளியான தகவலால் முதல்வருக்கு நெருக்கடி முற்றுகிறது.


முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் 7 பேரை விடுவிக்க தீர்மானம் நிறைவேற்றி தமிழக அமைச்சரவை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு அனுப்பிவைத்தது. தீர்மானம் அனுப்பி வைத்து ஓராண்டுக்கும் மேல் ஆகிவிட்ட நிலையில், அதைப் பற்றி ஆளுநர் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. இந்த விவகாரத்தில் அரசியல் கட்சிகள் ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் தொடர்ந்து அழுத்தம் கொடுத்துவருகின்றனர். ஆனாலும், தமிழக ஆளுநர் எந்த முடிவையும் அறிவிக்காமல் இருக்கிறார்.


இந்நிலையில், 7 பேர் விடுதலைக்கான தமிழக அரசின் தீர்மானத்தை ஆளுநர் ஏற்க மறுத்து தமிழக முதல்வரிடம் வாய்மொழியாக தெரிவித்துவிட்டதாக செய்திகள் வெளியாயின. இதனையடுத்து இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் தமிழக முதல்வருக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கியிருக்கின்றன. இதைப் பற்றி தமிழக முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதுதொடர்பாக திமுக  தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள  ட்விட்டர் பதிவில், “பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது" என தமிழக ஆளுநர், முதல்வரிடம் தெரிவித்துவிட்டதாக வெளியாகியுள்ள செய்தி குறித்து முதல்வர், தமிழக மக்களுக்கு உடனே விளக்கம் தந்திட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.


இதேபோல விசிக தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “7 பேர் விடுதலைக்கு தமிழக ஆளுநர்  தெரிவித்திருந்தால் எழுத்துபூர்வமாக நிராகரித்து அனுப்பும்படி தமிழக அரசு வலியுறுத்தியிருக்க வேண்டும். அதைச் செய்யாததன் மூலம் ஆளும் அதிமுக அரசும் ஆளுநரும் சேர்ந்து தமிழர்களுக்கு எதிராக நாடகம் ஆடுவதாகவே எண்ணத் தோன்றுகிறது. தமிழக ஆளுநர் தம்மிடம் கூறியது உண்மையா இல்லையா என்பதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். இது அவரது கடமை. இல்லாவிட்டால் 7 பேர் விடுதலைக்கு தடையாக கவர்னர் மட்டுமல்ல அதிமுக அரசும்தான் என்றே பொருள்படும்.” என்று தெரித்துள்ளார்.
எழுவர் விடுதலைக்கு தொடர்ந்து குரல் கொடுத்துவரும் அதிமுகவின் கூட்டணி கட்சியான பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில், கவர்னரின் நிலைப்பாடு அரசியல் சட்டத்துக்கு எதிரானதாது. இதன் உண்மைத்தன்மை குறித்து ஆளுநரும் முதல்வரும் மக்களுக்கு விளக்க வேண்டும்.  தமது முடிவை அதிகாரப்பூர்வமான முறையில் ஆளுநர் தமிழக அரசுக்கு அறிவித்திருக்க வேண்டும். அது அரசியல் சட்டப்படியான அவரது கடமை. எந்த முடிவாக இருந்தாலும் அதை அதிகாரப்பூர்வமாக அரசுக்கு தெரிவிக்க வேண்டும். அமைச்சரவை தீர்மானத்தை ஏற்க மறுத்து ஆளுநர் திருப்பி அனுப்பும் பட்சத்தில், அந்தப் பரிந்துரையை அவருக்கு தமிழக அமைச்சரவை மீண்டும் அனுப்பி வைக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.


அரசியல் கட்சிகள் இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் உண்மை நிலையை விளக்க வேண்டும் என்று கோரிவரும் நிலையில், இது பற்றி முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி எதுவும் தெரிவிக்கவில்லை. அந்தச் செய்திக்கு மறுப்பும் தெரிவிக்கவில்லை. இடைத்தேர்தல் பிரசாரம் இன்று ஓய்வடைய நிலையில், இதைப் பற்றி முதல்வர் விளக்குவாரா அல்லது தேர்தல் முடிந்த பிறகுதான் விளக்கம் அளிப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

click me!