தமிழகத்தில் இடைத்தேர்தல் வேண்டாம்... தேர்தல் ஆணையத்துக்கு தமிழக அரசு பரபரப்பு கடிதம்..!

By Asianet TamilFirst Published Sep 11, 2020, 8:35 AM IST
Highlights

தமிழகத்தில் குடியாத்தம், திருவொற்றியூர் தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை நடத்த ஆளுங்கட்சி ஆர்வம் காட்டவில்லை.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் காலியாக உள்ள சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதை கருத்தில் கொண்டு செப்டம்பர் 7 வரை இடைத்தேர்தல் கிடையாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேலும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் பீகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதால், அண்மையில் கொரோனா காலத்தில் தேர்தல் நடத்துவது குறித்து வழிகாட்டு நடைமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்தது.


இந்நிலையில் பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் டெல்லியில் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பிறகு தேர்தல் ஆணையத்தின் செய்திக் குறிப்பில், “பீகார் சட்டப்பேரவை தேர்தலோடு, காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும்” என அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் திருவொற்றியூர், குடியாத்தம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளும், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியும் காலியாக உள்ளன. தேர்தல் ஆணைய அறிவிப்பில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டப்பேரவை தொகுதியின் பெயர்கள் இடம்பெறவில்லை. கடந்த பிப்ரவரியில் காலியான குடியாத்தம், திருவொற்றியூர் தொகுதிகள் மட்டுமே இடைத்தேர்தல் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.


தற்போதைய சட்டப்பேரவைக்கு ஆயுட்காலம் இன்னும் 7 மாதங்களே இருப்பதால், இந்தத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவேண்டிய ஓராண்டுக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்றால், அதை தலைமை தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்ய வேண்டும் என்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு உள்ள சூழலில் இடைத் தோ்தலை நடத்தப்பட வேண்டாம் என்று இந்தியத் தோ்தல் ஆணையத்துக்கு தலைமைச் செயலாளா் க.சண்முகம் கடிதம் எழுதியுள்ளாா்.
 இதுதொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், “கொரோனா காலத்தில் இடைதேர்தல் வைத்தால் நோய் தொற்று அதிகரிக்கும். எனவே அந்த எண்ணத்தில்தான் அரசு சார்பில் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யும்.” என்று தெரிவித்துள்ளார்.

click me!