
ஜெயலலிதா மரணம் குறித்து மத்திய அரசு ஏன் விசாரணை நடத்த வேண்டும் என ஓ.பி.எஸ் ஆதரவாளர் கே.பி.முனுசாமி விளக்கமளித்துள்ளார்.
ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி ஓ.பி.எஸ் தரப்பினர் தமிழ்நாடு முழுவதும் 33 இடங்களில் இன்று உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டனர்.
அதன் ஒருபகுதியாக கிருஷ்ணகிரியில் அசோக்குமார் எம்.பி.தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அப்போது பேசியதாவது:-
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும்.
தற்போது தமிழ்நாட்டில் சசிகலாவின் பினாமி அரசு செயல்பட்டு வருகிறது.
இந்த பினாமி அரசு இருக்கும் வரை அவர்கள் விசாரணை நடத்தினால் அது உண்மையான விசாரணையாக இருக்காது.
குற்றம் சுமத்தப்பட்டவர்களே ஆட்சியில் இருப்பதால் அவர்கள் விசாரணை பூனை கையில் பாலை பாதுகாக்க கொடுத்த கதையாக மாறிவிடும்.
இதனால் தான் மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்கிறோம்.
மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறோம்.
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து ஏற்கனவே அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை போலவே எய்ம்ஸ் மருத்துவமனையின் அறிக்கையும் உள்ளது.
எனவே ஜெயலலிதா மரணம் குறித்த சந்தேகம் மேலும் மேலும் வலுத்து கொண்டே போகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.