சசிகலா வருகையைக் கண்டு அதிமுகவினர் அஞ்சுவது ஏன் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் கேள்வி எழுப்பினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரச கள்ளக்குறிச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “சசிகலா தமிழகம் வர உள்ளார். அவருடைய வருகையின் போது, கலவரம் நடக்க வாய்ப்புள்ளது என்று தமிழக மூத்த அமைச்சர்கள் டிஜிபியிடம் புகார் அளித்துள்ளனர். சசிகலா வருகையைக் கண்டு அதிமுகவினர் அஞ்சுகிறார்கள் என்று தெரியவில்லை. இந்தப் புகாரைத் தொடர்ந்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும் என டிஜிபி அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழக டிஜிபி திரிபாதி, நாகை மாவட்ட எஸ்.பி.யாக இருந்த காலத்திலிருந்தே நேர்மையானவர் எனப் பெயரெடுத்தவர். அவர் எக்காரணத்தைக் கொண்டும் உள்கட்சி விவகாரங்களில் தலையிடக் கூடாது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாய நிலம் இருக்கிறது. அவர் விவசாயி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதற்காக அவர் பச்சைத் துண்டு போட்டுக்கொண்டு நான் விவசாயி என அடையாளப்படுத்தவேண்டிய அவசியமில்லை. புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளை பாதிக்காது என எடப்பாடி பழனிச்சாமி கூறுவது எள்ளவும் ஏற்கக்கூடியது அல்ல. விவசாயிகள் தங்கள் பயிர்க் கடனை தள்ளுபடி செய்ய கோரிக்கை வைத்து ஓராண்டுக்கு முன் போராடிய போது, அதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றவர்தான் பழனிசாமி என்பதை விவசாயிகள் நன்கு அறிவார்கள்.
தற்போது விவசாயக் கடனை தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதை வரவேற்கிறோம். ஆனால், இது தேர்தல் அரசியலை முன்வைத்து தள்ளுபடி செய்யப்பட்டது என்பதும் விவசாயிகள் அறிவார்கள். எனவே கடன் தள்ளுபடி மூலம் வாக்குகளைப் பெறலாம் என முதல்வர் நம்பினால் அது பொய்த்துபோகும். மத்திய அரசு நாட்டு மக்களுக்கு ஏதிரான திட்டங்களை செயல்படுத்துவதை அதிமுக அரசு ஆதரிப்பதால், பாஜக அரசு மீதுள்ள வெறுப்பு, தமிழக அரசும் மீதும் மக்களுக்கு உள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவை வெளியில் இருக்கும் வேறொரு கட்சித்தான் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.
வெளியில் உள்ள கட்சியின் சொல்படிதான் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் உருவாக்கப்பட்டன. அந்த ஒருங்கிணைப்பாளர்கள் தொடர்வார்களா அல்லது வேறொருவர் பொதுச்செயலாளர் ஆவாரா என்பதையும் வெளியில் இருக்கும் வேறொரு கட்சித்தான் தீர்மானிக்ககூடிய நிலையில் அதிமுக உள்ளது.” என்று முத்தரசன் தெரிவித்தார்.