குடியுரிமை சட்டத்துக்கு அன்புமணி ஏன் ஆதரவு..? கொஞ்சம் விளக்குறீங்களா ஐயா... ராமதாஸுக்கு திமுக எம்.பி. கேள்வி!

By Asianet TamilFirst Published Dec 13, 2019, 9:44 AM IST
Highlights

இந்த விவகாரத்தில் குடியுரிமை சட்டத்தை ஆதரித்த அதிமுகவை திமுக விமர்சித்துவருகிறது. வரும் 17ம் தேதி குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட்டத்தையும் திமுக அறிவித்துள்ளது. குடியுரிமை சட்டத்தில் அதிமுக மட்டுமல்ல, பாமகவின் ஒரே உறுப்பினரான பாமகவின் அன்புமணியும் ஆதரித்து வாக்களித்தார்.  

குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக மா நிலங்களவையில் ஒரே பாமக உறுப்பினரான அன்புமணி ராமதாஸ் வாக்களித்தது பற்றி தருமபுரி திமுக எம்.பி. செந்தில்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
குடியுரிமை சட்டத்தில் நாடாளுமன்றத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த மசோதா  நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் பாஜகவுக்கு தனி மெஜாரிட்டி உள்ள நிலையில், எளிமையாக இச்சட்டம் நிறைவேறியது. மாநிலங்களவையில் பாஜகவுக்கு மெஜாரிட்டி இல்லாத நிலையில், இச்சட்டம் நிறைவேறுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், அதிமுக, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் மாநிலங்களவையிலும் நிறைவேறியது.


இச்சட்டத்தின்படி பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 2014 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு இந்தியாவில் குடியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட உள்ளது. ஆனால், முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு மட்டும் குடியுரிமை வழங்க இந்தச் சட்ட மசோதா வழிவகை செய்கிறது. இச்சட்டத்தில் முஸ்லீம்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதால், எதிர்க்கட்சிகள் விமர்சித்துவருகின்றன. 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் வசித்துவரும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்படாதது பற்றி சர்ச்சையும் எழுந்துள்ளது. வட கிழக்கு மாநிலங்களிலும் போராட்டங்கள் வெடித்துள்ளன. பல இடங்களில் வன்முறை சம்பவங்களும் நடந்துள்ளன.
இந்த விவகாரத்தில் குடியுரிமை சட்டத்தை ஆதரித்த அதிமுகவை திமுக விமர்சித்துவருகிறது. வரும் 17ம் தேதி குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட்டத்தையும் திமுக அறிவித்துள்ளது. குடியுரிமை சட்டத்தில் அதிமுக மட்டுமல்ல, பாமகவின் ஒரே உறுப்பினரான பாமகவின் அன்புமணியும் ஆதரித்து வாக்களித்தார்.  இந்நிலையில் அன்புமணி ராமதாஸ் குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தது பற்றி தருமபுரி எம்.பி. செந்தில்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். 
 இதுகுறித்து ட்விட்டரில் செந்தில்குமார் வெளியிட்டுள்ள பதிவில், “நம் கட்சி (பாமக) சேர்ந்த ராஜ்யசபா உறுப்பினர் குடியுரிமை_மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளர். இஸ்லாமிய மற்றும் இலங்கை தமிழர்கள் குறித்து இது என்ன மாதிரி ஆன அரசியல் விளையாட்டு என்று கொஞ்சம் கருத்து கூறினால் மக்கள் உங்கள் சுயநலத்தை புரிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.” என்று பாமக நிறுவனர் ராமதாஸுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

click me!