ஏன் பயந்து சாகுறீங்க... இடுக்கி மாவட்டத்தை எங்ககிட்ட கொடுத்துடுங்க... கேரளாவுக்கு ஜெர்க் கொடுக்கும் சீமான்..!

By Thiraviaraj RMFirst Published Nov 14, 2021, 5:43 PM IST
Highlights

முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பதை விளக்க வேண்டும்.
 

முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது என நினைத்தால் இடுக்கி மாவட்டத்தைத் தமிழகத்திடம் கொடுத்துவிடுங்கள் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேட்டுக்கொண்டுள்ளார். 

முல்லைப்பெரியாறு அணையை இடிக்கும் நோக்கில் செயல்படும் கேரள அரசைக் கண்டித்தும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் தேனி பங்களாமேட்டில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ``முல்லைப்பெரியாறு அணையில் கேரள நீர்வளத்துறை அமைச்சர் உள்ளிட்டோர் சேர்ந்து தண்ணீரைத் திறந்தனர். இதுகுறித்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் கேட்டால், 'தமிழக அரசுக்குத் தெரிந்து தான் தண்ணீர் திறக்கப்பட்டது' என்கிறார்.

பிறகு ஏன் தமிழகம் சார்பில் அரசியல்வாதிகள், அதிகாரிகள் அங்கு செல்லவில்லை என்பதற்குப் பதில் இல்லை. கேரள அரசியல்வாதிகள் முல்லைப்பெரியாறு அணையை இடிக்க வேண்டும் என்கின்றனர். தமிழர்களால் கட்டப்பட்ட அணையை இடிக்க விடமாட்டோம். வேண்டுமென்றால் இருமாநில அரசுகளும் சரிபாதியாக நிதியைப் பங்கீடு செய்து கொண்டு, புதிய அணையைக் கட்டட்டும். ஆனால், இதை அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

நடிகர் பிருத்விராஜ் முல்லைப்பெரியாறு அணை குறித்து சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டதைத் தொடர்ந்து, கேரள முதல்வர் பினராயி விஜயன் அணை பாதுகாப்பாக இருக்கிறது. அணை குறித்து தவறான தகவல் பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதேவேளையில், நீதிமன்றத்தில் அணை பலவீனமாக இருக்கிறது என்ற கருத்தைக் கேரள அரசு முன்வைப்பது முற்றிலும் முரணாக இருக்கிறது.

உச்ச நீதிமன்றம் 142 அடி வரை அணையில் தண்ணீர் தேக்கலாம் என உத்தரவிட்டிருந்தபோதும், 136 அடியைத் தாண்டிய போதே, தண்ணீர் திறக்கப்பட்டதற்குத் தமிழக அரசு கண்டனம் தெரிவிக்கவில்லை. அணையை இடிக்க வேண்டும் என கேரளா தரப்பில் தொடர்ச்சியாகக் கூறப்பட்டு வருகிறது. இதற்கும் எந்த கண்டனமும் இல்லை. முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பதை விளக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:- மோதல் - சூர்யா திரைப்படம் ஓடிய திரையரங்கில் பா.ம.க.-வினர் ரகளை…. போஸ்டரை கிழித்தெறிந்து ஆவேசம்..!

பேபி அணையைப் பலப்படுத்தத் தடையாக உள்ளதாகக் கூறப்படும் மரங்களை வெட்ட 40 ஆண்டுகளாக கேரள அரசுடன் போராட வேண்டிய நிலை உள்ளது. பெருந்தலைவர் காலத்தில் தேவிக்குளம், பீர்மேடு பகுதிகள் கேரளாவுடன் சென்றது. அதைத்தொடர்ந்து அணையின் பாதுகாப்புப் பணி உரிமையையும் எம்ஜிஆர் விட்டுக்கொடுத்தார். தற்போது அணை பலவீனமாக உள்ளது, பாதுகாப்பில்லாத சூழல் உள்ளது என்கிறார்கள். அவ்வாறு பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது என நினைத்தால் இடுக்கி மாவட்டத்தைத் தமிழகத்திடம் கொடுத்துவிடுங்கள். முல்லைப்பெரியாறு அணைக்காகப் போராடும் பா.ஜ.க-வினர் நேரடியாகப் பிரதமர் மோடியிடம் முறையிட்டால் விரைவில் தீர்வு கிடைத்துவிடும்.

பாட்டாளி மக்களுக்காக உழைக்கும் கட்சி எனக் கூறும் கம்யூனிஸ்டுகள் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு நிலைப்பாட்டை எடுக்கின்றனர். முல்லைப்பெரியாறு விவகாரத்தில் தமிழக விவசாயிகளை வஞ்சிக்கின்றனர். இவர்கள் தான் மேற்குவங்கத்தில் மம்தாவைத் தோற்கடிக்க பா.ஜ.க-வை ஆதரித்தவர்கள்.

இத்தகையைச் சூழலில், தமிழக அரசு முல்லைப்பெரியாறு அணை உரிமையை விட்டுக்கொடுத்துவிடக் கூடாது. இல்லையெனில் கேரளாவுக்குக் கொண்டு செல்லப்படும் உணவுப்பொருள்களைத் தடுப்போம். தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு கேரள அரசும் செயல்பட வேண்டும்" என அவர் தெரிவித்தார்.

click me!