செல்வப் பெருந்தகை யார் தெரியுமா..? எவ்ளோ கேஸ் இருக்கு தெரியுமா.?? கிழித்து எறிந்த ஜெயக்குமார்.

By Ezhilarasan BabuFirst Published Apr 29, 2022, 6:11 PM IST
Highlights

ஜெயலலிதாவை கொச்சைப்படுத்தி பேசும் செல்வபெருந்தகை யார்? அவர் மீது எத்தனை வழக்குகள் இருக்கிறது தெரியுமா? என கேள்வி எழுப்பிய ஜெயக்குமார், அவரை பற்றி கூகுளில் தேடி பாருங்கள் என்றார்.  எஜமானருக்கு விசுவாசம் காட்ட எலும்புத்துண்டு போட்டால் எப்படி  வாலாட்டுவார்களோ அதைதான் இப்போது காங்கிரஸ் கட்சியினர் செய்கின்றனர் என்றார். 
 

திமுகவினரை விட காங்கிரஸ் கட்சியினர் அதிகம் பேசுகின்றனர் என்றும், மறைந்த தலைவரை கொச்சைப்படுத்தி பேசுவது ஒருபோது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அப்படிப் பேசும் செல்வபெருந்தகை யார் அவர் மீது எத்தனை வழக்குகள் இருக்கிறது என்று கூகுளில் தேடிப் பாருங்கள் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டம் தெரிவித்துள்ளார்.

அதிமுக சார்பில் இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பின்னர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் அதிமுக சார்பில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது என்றார். அந்த  காலத்தில் வாசலிலே நின்று இஸ்லாமிய மக்களை கை கூப்பி வரவேற்று நிகழ்ச்சி நடத்திய வரலாறெல்லாம் அம்மா ஆட்சியில் நடந்துள்ளது என்றார். ஆனால் திமுகவைப் பொறுத்தவரையில் உதட்டில் வேஷம் வைத்து இஸ்லாமியர்களுக்கு நன்மை செய்வது போல நடிக்கின்றனர் என்றார். திமுக ஆட்சி நடத்திய 98 ஆம் ஆண்டு அத்வானி கோவை வந்தபோது கோனியம்மன் கோவில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. அது தமிழ்நாட்டுக்கே தெரியும் என்றார்.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு நாள் வந்துவிட்டால் போதும், இஸ்லாமிய மக்களுக்கு அடி வயிறு பற்றி எரிவது போல பயம் வந்துவிடும். திமுக ஆட்சியில் தங்களை காவல்துறையினர் எங்கு கைது செய்து விடுவார்களோ, தங்களுக்கு எங்கு தீவிரவாதி பட்டம் கட்டி விடுவார்களோ என்ற பயம் இஸ்லாமியர்கள் மத்தியில் இருக்கிறது என்றும், ஆனால் மறைந்த  முன்னாள் முதல்வர் அம்மா சாதி மத இன வேறுபாடு இல்லாமல் சமூக நல்லிணக்கத்தோடு ஒன்றுபட்டு வாழும் ஒரே மாநிலம் தமிழ்நாடு  என்றும், எந்த பிரச்சனையும் இல்லாமல், டிசம்பர் 6 வந்தாலும்கூட தமிழ்நாட்டில் முழு அமைதி காத்த முதல்வர் என்ற பெருமை அவரையே சேரும் என்றார். அதிமுக பாஜக கூட்டணியில் இருந்தாலும் இஸ்லாமிய மக்களுக்கு ஆதரவு அளிக்கும் கட்சியாக இருந்து வருகிறது. அதிமுகவைப் பொறுத்தவரையில் கொள்கை வேறு கூட்டணி வேறு ஒரு கட்சியின் கொள்கையும் சித்தாந்தமும்  வேறு வேறாகத்தான் இருக்கின்றன.

அதேபோல் அதிமுக பாஜகவுடன் கூட்டணியில் இருந்து வருகிறது. தேர்தல் நேரத்தில் திமுக பொய்யான வாக்குறுதிகளை கூறியது அது தேர்தல் நேரத்தில் எடுபட்டது ஆனால் தற்போது திமுக மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். தற்போது திமுகவினரை காட்டிலும் காங்கிரஸ் கட்சியினர் அதிகம் பேசுகின்றனர், முன்னாள் முதல்வர், மறைந்த தலைவரை பற்றி கொச்சைப்படுத்தி பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாது, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை கொச்சைப்படுத்தி பேசும் செல்வபெருந்தகை யார்? அவர் மீது எத்தனை வழக்குகள் இருக்கிறது தெரியுமா? என கேள்வி எழுப்பிய ஜெயக்குமார், அவரை பற்றி கூகுளில் தேடி பாருங்கள் என்றார்.  எஜமானருக்கு விசுவாசம் காட்ட எலும்புத்துண்டு போட்டால் எப்படி  வாலாட்டுவார்களோ அதைதான் இப்போது காங்கிரஸ் கட்சியினர் செய்கின்றனர் என்றார். 
 

click me!