தமிழக எதிர்க்கட்சித் தலைவர் யார்..? பரபரப்பான கட்டத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்..!

By Asianet TamilFirst Published May 10, 2021, 9:12 AM IST
Highlights

தமிழக சட்டப்பேரவையில் அதிமுக தலைவரைத் தேர்வு செய்வதற்கான எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று காலை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் இபிஎஸ்-ஓபிஎஸ் இருவரில் யார் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று தெரிந்துவிடும்.
 

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 66 இடங்களில் வெற்றி பெற்றது. சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பிடித்துள்ள அதிமுக சார்பில் எதிர்க்கட்சித் தலைவரைத் தேர்வு செய்யும் எம்.எல்.ஏக்கள் கூட்டம் கடந்த 7ம் தேதி மாலை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், தங்கமணி, ஜெயக்குமார், கே.பி.முனுசாமி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் அதிமுக சட்டமன்ற குழுத் தலைவரை தேர்வு செய்வதில் இழுபறி ஏற்பட்டது.
கட்சி அலுவலகத்துக்கு வெளியே ஓபிஎஸ்-இபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. கட்சிக்கு ஒற்றைத் தலைமையே தேவை என்றும் முழங்கினர். அதிமுக 66 தொகுதிகளில் வெல்ல எடப்பாடி பழனிச்சாமிதான் காரணம் என்று இபிஎஸ் தரப்பும், தென் மாவட்டங்களில் அதிமுக தோற்க வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய ஈபிஎஸ்தான் காரணம் என்று ஓபிஎஸ் தரப்பும் மாறிமாறி புகார் கூறியதாக தகவல்கள் வெளியாகின. இதனால், சட்டமன்ற தலைவரை தேர்வு செய்வதில் தொடர் இழுபறி ஏற்பட்டது. 
4 மணி நேரம் நடந்தும் முடிவு எடுக்கப்படாமல் கூட்டம் முடிந்தது. பின்னர் ஓபிஎஸ்-இபிஎஸ் மெரீனாவில் உள்ள எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா நினைவிடங்களில் மரியாதை செலுத்தினர். அங்கும் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்கள் வாக்குவாதம் செய்தனர். இந்நிலையில் இக்கூட்டம் மே 10-ஆம் தேதிக்கு (இன்று) ஒத்திவைக்கப்பட்டது. இன்று ஊரடங்கு தொடங்கியுள்ள நிலையில். எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை சென்னை மாநகர போலீஸில் அதிமுக அனுமதி பெற்றுள்ளது. 
சட்டப்பேரவைக் கூட்டம் நாளை தொடங்க உள்ளதால், எதிர்க்கட்சித் தலைவரை தேர்வு செய்ய வேண்டிய கட்டயாம் ஏற்பட்டுள்ளது. இன்று தேர்ந்தெடுத்தால்தான் அவர்களுக்கு முன் வரிசையில் இடம் கிடைக்கும். மேலும் புதிய சபாநாயகர் தேர்தலில் வெற்றி பெறுவோரை ஆளுங்கட்சி-எதிர்க்கட்சி தலைவர்கள் இணைந்து அவருடைய இருக்கையில் அமர வைப்பார்கள். எனவே, இன்று அதிமுக சட்டமன்றத் தலைவர் யார் என்பதை முடிவு செய்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 

click me!