கட்டிங்மேல கட்டிங்போட்டு கல்லாகட்டிய ஆட்சி அதிமுக ஆட்சி. சாத்தான் வேதம் ஓதலாமா? ஓபிஎஸ்சை கழுவி ஊத்திய அமைச்சர்

By Ezhilarasan BabuFirst Published Jul 8, 2021, 3:51 PM IST
Highlights

என்றென்றும் தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்டது எங்களது தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் ஆட்சி. ஆகவே ஓபிஎஸ் கூறுவதே சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக போக்குவரத்து கழக தொழிலாளர்களை வஞ்சித்து, துன்புறுத்தியது அதிமுக  ஆட்சிதான். ஆனால் போக்குவரத்து கழக தொழிலாளர்களின் நலன் பற்றி இன்று ஓபிஎஸ் அறிக்கை விடுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது என போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையின் முழு விவரம் பின்வருமாறு: - முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் அனைத்து போக்குவரத்து கழக தொழிலாளர்கள் மீது என்றும் அக்கறை கொண்ட திராவிட முன்னேற்றக் கழக அரசால் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் உருவாக்கப்பட்டது. கழகத் தலைவர் தளபதி தலைமையில் ஆட்சிக்கு வந்த இரு மாதங்களில் கொரோனா நோய்த்தொற்று ஊரடங்கு காரணமாக போக்குவரத்து நடைபெறாமல் பணி இன்றி நிர்வாகத்திற்கு வருமானமற்ற  நிலையிலும், ஒட்டுமொத்த தொழிலாளர்களின் நலன்கள் மீது அக்கறை கொண்ட தமிழ்நாடு அரசு, மாண்புமிகு முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில் கடும் நிதி நெருக்கடியிலும் மாத ஊதியத்தை எவ்வித பிரச்சினையுமின்றி வழங்கியதை தொழிலாளர்கள் சமுதாயம் நன்றியுடன் பாராட்டுகிறது.

கழக ஆட்சி அமைந்த 20 நாட்களில் கொரோனா தொற்று உச்சக்கட்டத்தில் இருந்த இந்த இக்கட்டான சூழ்நிலையில் கடும் நிதி நெருக்கடிக்கு மத்தியில் 1-1-2020 முதல் 30-4- 2020 வரை ஓய்வு பெற்ற அனைத்து போக்குவரத்து கழக தொழிலாளர்களின் நலன் கருதி, பல்வேறு பணப்பலன்களாக ரூபாய் 497.32 கோடியினை கருணை உள்ளத்தோடு வழங்கியவர் நம் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்கள்.தற்போது கழக ஆட்சியில் அரசு போக்குவரத்து கழகங்களில் எந்த தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்களும், எவ்வித பாதிப்பும் இல்லாமல் அவரவர் வழித்தடத்தில் அமைதியாக பணியாற்றி வருகின்றனர். உடல்நலம் குன்றியவர்கள் முறையாக மருத்துவச் சான்றுகள் பேரில் இலகுப் பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். உடல் நலம் குன்றியோர் யாரையும் பணி மாறுதல் செய்து துன்புறுத்தவில்லை. தொழிலாளர்களை தொழிலாளர்களாக பாவிக்காத அரசு அதிமுக அரசு என்பதற்கு கடந்த 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் தொழிலாளர்கள் பட்ட வேதனைகளை சாட்சி.20 சதவீத தீபாவளி போனஸ் கடந்த 1996-2001 கலைஞர் ஆட்சிக்காலத்தில் வழங்கியதை மறுத்து வெறும் 10 சதவீதம் மட்டுமே வழங்கி துன்புறுத்தியது அதிமுக அரசுதான்,

மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை முறையாக நடத்தப்பட வேண்டிய போக்குவரத்து கழக தொழிலாளர்களின் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை தொடராமல் ஒரு ஒழுங்கற்ற போக்கை அதிமுக அரசு கடைப்பிடித்து, அதை காலம் கடத்தி அதனால் தொழிலாளர்களின் உரிமையில் மண்ணள்ளிப் போட்டது அதிமுக ஆட்சி, பணி ஓய்வு பெற்ற பல்லாண்டுகள் ஆகியும், அவர்களுக்குச் சேர வேண்டிய அனைத்து பண பலன்களும் உடனடியாக வழங்கப்படாமல், அவர்களுக்குச் சொந்தமான பணத்தை பல்வேறு வகைகளில் சூறையாடியது அதிமுக ஆட்சி, கடந்த அதிமுக 10 ஆண்டுகள் ஆட்சியில் மாவட்டங்களுக்கு இடையேயான இட மாறுதலுக்கு ஒரு தொகை, பதிவு உயர்வுக்கு ஒரு தொகை, அனைத்து பணிகளிலும் ரூட் போஸ்ட்டிங்குக்கு ஒரு தொகை, OD யில் உலாவர ஒரு தொகை, தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியில் இருந்து அவர்களுடைய பணத்தை திருமணம், வீடு கட்ட என்ற கோரிக்கைகளுக்கு கடன் தொகை பெற ஒரு தொகை, என எல்லாவற்றிற்கும் கல்லா கட்டிய ஆட்சி அதிமுக ஆட்சி.போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் பொற்காலமாக அமைய உள்ள மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான கழக அரசின் இரண்டு மாதமேயான நல்லாட்சியில் குறை கூற எவ்வித அருகதையும் தகுதியும் ஓபிஎஸ்சுக்கு இல்லை,

தரமில்லாத உதிரிபாகங்கள் கொள்முதல், தரமில்லாத கேண்டீன் உணவு வழங்கியது, விளம்பரங்கள் மூலம் தவறான முறையில் கொள்ளை அடித்தது அதிமுக ஆட்சி, தொழிலாளர்களை அரசியல் ரீதியாக பழி வாங்கியது அதிமுக ஆட்சி, அதற்கான சாட்சி மேற்கண்ட ஆதாரங்களே. மாறாக என்றென்றும் தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்டது எங்களது தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் ஆட்சி. ஆகவே ஓபிஎஸ் கூறுவதே சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சராகவும், துணை முதலமைச்சராகவும், நிதி அமைச்சராகவும் இருந்த ஓபிஎஸ், கடந்த 10 ஆண்டுகள் போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பட்ட கஷ்டங்கள் அனைத்தையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு, இன்று யாரோ எழுதிக் கொடுத்ததை கொடுத்து நீலிக்கண்ணீர் வடிப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
 

click me!