தமிழ்நாடு தினம் எப்போது.? அப்போ திமுக திராவிட நாடுக்காக போராடியது.. வரலாற்றை விளக்கிய திமுக கூட்டணி கட்சி.!

By Asianet TamilFirst Published Nov 2, 2021, 10:09 PM IST
Highlights

தமிழ்மொழி பேசும் மக்கள் வாழக்கூடிய பகுதிகளை தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்ற போராட்டத்தின் விளைவாகத்தான் திருத்தணி வட்டமும், கன்னியாகுமரி மாவட்டமும் தமிழகத்தின் பகுதியாக இணைக்கப்பட்டு தற்போதுள்ள “தமிழ் மாநிலம்” உருவானதும் இதே நாளில்தான். இந்த கால கட்டத்தில் திமுக திராவிட நாடு கோரிக்கையை முன்வைத்து போராடிக் கொண்டிருந்தது.

மொழி வழி மாநிலங்கள் அமைக்கப்பட்டது 1956 நவம்பர் 1 என்பதே வரலாற்று உண்மை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் கே.பி.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு தினம் தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், திமுக கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  தமிழ் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டுமென்று 1938-ஆம் ஆண்டிலிருந்து போராடியது இந்திய பொதுவுடைமை இயக்கம். இந்திய விடுதலைக்குப் பிறகும் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடைபெற்றது. அரசின் அடக்குமுறை, துப்பாக்கிச்சூடு, உயிர்த்தியாகம் என்று நீடித்தப் போராட்டங்களுக்கு பிறகே மத்திய காங்கிரஸ் அரசாங்கம் மொழிவாரி மாநிலங்கள் என்ற கோரிக்கையை ஏற்று 1956 நவம்பர் 1-ஆம் தேதி சென்னை மாநிலம், கர்நாடக ஏகிகரண சளுவளி, நவ கேரளா, விசாலாந்திரா, சம்யுத்க மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.

தமிழ்மொழி பேசும் மக்கள் வாழக்கூடிய பகுதிகளை தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்ற போராட்டத்தின் விளைவாகத்தான் திருத்தணி வட்டமும், கன்னியாகுமரி மாவட்டமும் தமிழகத்தின் பகுதியாக இணைக்கப்பட்டு தற்போதுள்ள “தமிழ் மாநிலம்” உருவானதும் இதே நாளில்தான். இந்த கால கட்டத்தில் திமுக திராவிட நாடு கோரிக்கையை முன்வைத்து போராடிக் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. உருவாக்கப்பட்ட தமிழ் மாநிலத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட வேண்டுமென பல கட்ட போராட்டங்கள் தமிழ்நாட்டில் நடைபெற்றன. நீண்ட போராட்டத்திறகுப் பிறகு, தமிழ் மொழி அடிப்படையிலான மாநிலம் உருவான போதும், அதற்கு சென்னை மாகாணம் என்றே பெயர் சூட்டப்பட்டது. தமிழ்நாடு என பெயர் சூட்ட வேண்டுமென சட்டமன்றத்தில் கம்யூனிஸ்ட்டுகள் வலுவாக குரல் கொடுத்தார்கள்.

நாடாளுமன்றத்தில் 1961ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தின் பெயரை தமிழ்நாடு என மாற்ற வேண்டுமென பி.ராமமூர்த்தி சட்டதிருத்த மசோதாவை முதன்முதலில் கொண்டு வந்தார். இம்மசோதா விவாதத்திற்கு வரும் நேரத்தில், பி.ராமமூர்த்தி கைது செய்யப்பட்டு, சிறையிலிருந்த சூழ்நிலையில் நாடாளுமன்றத்தில் இம்மசோதாவை முன்மொழிந்து மேற்கு வங்கத்தைச் சார்ந்த புபேஷ்குப்தா நாடாளுமன்றத்தில் வாதாடினார். பேரறிஞர் அண்ணாவும் இத்தீர்மானத்திற்கு ஆதரவளித்தார். இதே கோரிக்கையை வலியுறுத்தி சங்கரலிங்கனார் விருதுநகரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தினை மேற்கொண்டார். 

இறுதியில் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த சங்கரலிங்கனார் 76ஆவது நாள் மரணமடைந்தார். தனது மரணத்திற்கு பின் உடலை கம்யூனிஸ்ட்டுகளிடம் ஒப்படைக்க வேண்டும் என எழுதி வைத்த உயிலின் அடிப்படையில் அவரது உடலை, கம்யூனிஸ்ட்டு தலைவர்கள் கே.பி.ஜானகி அம்மாள் அவர்களும், கே.டி.கே.தங்கமணியும் பெற்று அடக்கம் செய்தனர். இறுதியில் 1967ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி தோற்கடிக்கப்பட்டு பேரறிஞர் அண்ணா முதலமைச்சரான பிறகே,1967-ஆம் ஆண்டு ஜூலை 18-ஆம் தேதி “தமிழ்நாடு” என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. எனவே, மேற்கண்ட இந்த இரண்டு வரலாற்று நிகழ்வுகளை கொண்டாடுவதே பொருத்தமானதாக இருக்கும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டுகிறது.” என்று அறிக்கையில் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

click me!