இந்தியாவில் நடப்பது மக்களாட்சியா மன்னராட்சியா.? விமர்சித்தால் மிரட்டுவீர்களா.? பாஜகவை பங்கம் செய்த சீமான்.!

By Asianet TamilFirst Published Jan 18, 2022, 9:31 PM IST
Highlights

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியொன்றில் சிறுவர்கள் இருவர் மோசமான ஆட்சியாளர் குறித்து மன்னர், அமைச்சர் வேடமிட்டு, பகடி செய்ததற்காக அத்தொலைக்காட்சிக்கு அச்சுறுத்தலும், மிரட்டலும் விடுக்கும் பாஜகவின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

அரசுக்கு எதிராக அறச் சீற்றத்தையும், உள்ளக் குமுறலையும் வெளிப்படுத்தவும் தடையிடுவார்களென்றால், நடப்பது மன்னராட்சியா? மக்களாட்சியா? எனும் கேள்வி எழுகிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோவில், பிரதமர் நரேந்திர மோடியையும் அவருடைய ஆட்சியையும் இரு சிறுசவர்கள் கேலி செய்து ஒளிபரப்பரான விவகாரம் சர்ச்சையானது. இந்த நிகழ்ச்சிக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து தொலைக்காட்சி நிர்வாகத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியது. இந்த விவகாரத்தில் தமிழகத்தில் உள்ள பிற கட்சிகள் பாஜகவை விமர்சித்து வருகின்றன. அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ட்விட்டர் மூலம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஜீ தமிழ் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியொன்றில் சிறுவர்கள் இருவர் மோசமான ஆட்சியாளர் குறித்து மன்னர், அமைச்சர் வேடமிட்டு, பகடி செய்ததற்காக அத்தொலைக்காட்சிக்கு அச்சுறுத்தலும், மிரட்டலும் விடுக்கும் பாஜகவின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

பாஜகவின் ஆட்சி குறித்து அந்நிகழ்ச்சியில் நேரடியாக விமர்சிக்கப்படாதபோதும்கூட அத்தொலைக்காட்சியின் மீது அதிகாரத்தின் மூலம் அடக்குமுறையை ஏவிவிடத் துடிக்கும் பாஜகவின் செயல்பாடு கருத்துரிமை மீதானக் கோரத் தாக்குதலாகும். கல்புர்கி, நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கௌரி லங்கேஷ் போன்ற கருத்தாளர்களும், செயற்பாட்டாளர்களும் கொலை செய்யப்படுவதும், ஆனந்த் டெல்டும்டே, வரவர ராவ், ஸ்டோன் சுவாமி போன்ற சமூகச் செயற்பாட்டாளர்கள் கொடுஞ் சட்டங்களின் மூலம் பிணைக்கப்படுவதும், ஊடகங்கள் வெளிப்படையாக அச்சுறுத்தப்படுவதுமான நிகழ்வுகள் நாட்டின் ஜனநாயகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்குகின்றன.

 

ஏழு ஆண்டு கால பாஜகவின் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட கொடும் சட்டங்கள், பேரழிவுத்திட்டங்களின் விளைவினால் நாட்டு மக்கள் வாடி வதங்கிக் கொண்டிருக்கையில், அதுகுறித்த அறச் சீற்றத்தையும், உள்ளக் குமுறலையும் வெளிப்படுத்தவும் தடையிடுவார்களென்றால், நடப்பது மன்னராட்சியா? மக்களாட்சியா? எனும் கேள்வி எழுகிறது. இது மக்களாட்சித் தத்துவத்திற்கெதிரான மாபெரும் ஜனநாயகப்படுகொலை; கருத்துச்சுதந்திரத்தின் குரல் வளையை நெரிக்கும் அரசப் பயங்கரவாதம். இதனை ஒருபோதும் அனுமதிக்கவோ, சகித்துக்கொள்ளவோ முடியாது. அதிகாரப்பலம் கொண்டு ஊடகங்களை அடக்கியாள முற்படும் பாஜக அரசின் கொடுங்கோல் செயல்பாடுகளுக்கு எனது வன்மையான எதிர்ப்பினைப் பதிவுசெய்கிறேன்!” என்று சீமான் தெரிவித்தார்.

click me!