திமுக டூ பாஜக... சரத்குமாரின் அரசியல் பயணம் என்ன.? சட்டமன்ற தேர்தலில் சமக வாங்கிய வாக்குகள் எத்தனை தெரியுமா.?

By Ajmal KhanFirst Published Mar 12, 2024, 3:42 PM IST
Highlights

தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற முனைப்போடு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை தொடங்கிய நடிகர் சரத்குமார், சுமார் 16 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கட்சியை பாஜகவில் இணைத்துள்ளார். 

சரத்குமாரும் அரசியலும்

திரைத்துறையில் சுப்ரிம் ஸ்டாராக கலக்கிய சரத்குமார், அரசியல் மீதான ஆசையில் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்தார்.1996 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். இந்த தேர்தலுக்குப் பிறகு திமுகவில் இணைந்த சரத்குமாருக்கு ராஜ்யசபா எம்பி பதவி வழங்கப்பட்டது. அடுத்த சில ஆண்டுகளிலையே திமுக தலைமையோடு ஏற்பட்ட மோதல்  காரணமாக திமுகவில் இருந்து விலகியவர் 2001 ஆம் ஆண்டு தேர்தலின் போது அதிமுகவில் ஜெயலலிதா முன்னிலையில் சேர்ந்தார்.

Latest Videos

தனிக்கட்சியை தொடங்கிய சரத்

அடுத்த 5 ஆண்டுகளில் அதிமுகவில் இருந்து விலகிய சரத்குமார், 2007 ஆம் ஆண்டில் சமத்துவ மக்கள் கட்சி என்ற தனி கட்சியை தொடங்கினார். இதனையடுத்து 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் சரத்குமார் போட்டியிட்டார். ஆனால் வாக்குகளும் கிடைக்கவில்லை, வெற்றியும் பெற முடியவில்லை. இதனை தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி இணைந்து போட்டியிட்டது. இதில் இரண்டு இடங்களில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றது. ஒரு தொகுதியில் சரத்குமாரும் மற்றொரு தொகுதியில் எர்ணாவூர் நாராயணனும் வெற்றி பெற்றனர். இதனைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி இரண்டாக உடைந்தது.

இரண்டாக உடைந்த சமக

இதனையடுத்து  அதிமுக கூட்டணியில் இருந்தும் விலகுவதாகவும் சரத்குமார் அறிவித்தார். அதிமுகவில் என்னை கறிவேப்பிலையாக பயன்படுத்தினார்கள் எனவும்  சரத்குமார் பரபரப்பாக விமர்சனம் செய்தார். இதனையடுத்து ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் உட்கட்சி மோதல் ஏற்பட்டபோது ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்து இருந்தார் சரத்குமார். 2017ஆம் ஆண்டு நடைபெற்ற ஆர். கேநகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக களம் இறங்கிய சரத்குமார், அந்த தொகுதியில் போட்டியிட்ட டிடிவி தினகரனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார்.

பாஜகவில் இணைந்த சமக

இதனையடுத்து கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தோடு இணைந்து தேர்தலை சரத்குமார் எதிர்கொண்டார். இதில், சரத்குமார் கட்சிக்கு 40 இடங்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால் 37 இடங்களுக்கு மட்டும் வேட்பாளர்களை அறிவித்த சரத்குமார், மீதமுள்ள 3 இடங்களை கமலிடம் திருப்பி கொடுத்துவிட்டார். இந்த தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி -89,220 வாக்குகள் மட்டுமே பெற்றது. போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது.

இந்த தேர்தலில்  திமுக 37.15 சதவிகித வாக்குகளும், அதிமுக 33.28% வாக்குகளும், பாஜக 2.63 சதவிகித வாக்குகளையும் பெற்றது. இதனையடுத்து தான் இந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் சமக இணைந்து போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனது கட்சியை முழுவதுமாக பாஜகவில் இணைத்து தொண்டர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளார். 

இதையும் படியுங்கள்

குழந்தைகளின் நடத்தை, உடல்மொழியில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும்- ராதிகா சரத்குமார் அட்வைஸ்

click me!