ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தினகரனிடம் தோல்வியடைந்ததை அடுத்து நேற்று அதிமுக., தலைமை அலுவலகத்தில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் சிலர் கலந்து கொள்ளவில்லை.
கலந்து கொண்ட ஓரிருவருக்கும் மூக்குடைப்புதான் நடந்தது.
அதிமுகவிலிருந்து ஓரங்கட்டப்பட்ட டிடிவி தினகரன், ஆர்.கே.நகரில் அதிமுக வேட்பாளர் மதுசூதனனை 40707 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். தினகரனுக்கு பழனிசாமி அணியிலிருக்கும் எம்பி செங்குட்டுவன் வாழ்த்து தெரிவித்தார். சிலர் மறைமுகமாக வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதனால், அமைச்சர்கள் சிலரும் எம்.எல்.ஏக்களும் தினகரன் பக்கம் செல்ல வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியானது.
இதை அடுத்து, கலக்கத்தில் ஆழ்ந்த ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பு அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தியது. இதன்படி நேற்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது.
இதில் ஆர்.கே.நகர் தோல்விக்கான காரணம் குறித்து விவாதிக்கப்பட்டது. அதைவிட கட்சியினர் தினகரன் பக்கம் சென்றுவிடாமல் தடுக்க என்ன செய்வது என்று அதிகமாக விவாதிக்கப் பட்டுள்ளது. இதை அடுத்து,
கட்சியினர் தினகரன் பக்கம் சென்றுவிடக்கூடாது என்பதற்காக தினகரனின் ஆதரவாளர்கள் 6 பேர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஸ்லீப்பர்செல் குறித்தும் பேச்சு எழுந்துள்ளது. இந்தக் கூட்டத்தில் அமைசர்கள் சிலர் கலந்து கொள்ள வில்லை என்றாலும், கூட்டத்தில் கலந்து கொண்ட கூட்டுறவு அமைச்சர் செல்லூர் ராஜுவை எவரும் பேசவிடவில்லை. அவர் பேச எழுந்த போதும் கூட, நீங்கள் பேசினால் எல்லோரும் பேசுவார்கள். அதனால் வீண் பிரச்னை ஏற்படும். எனவே பேசவேண்டாம் என்று கூறி அமர்த்தியுள்ளனர். இதனால் செல்லூர் ராஜு சற்றே அப்செட் ஆகியுள்ளார்.
மேலும், இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத அமைச்சர்கள் சிலர் குறித்தும் ஸ்லீப்பர்செல்கள் குறித்தும் இப்போது அதிமுக., வட்டாரத்தில் பரவலாக பேச்சு எழுந்துள்ளது.