சட்டமன்ற நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என கோரி 2012-ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கை அதிமுக அரசு சாக்குப்போக்கு சொல்லி நிலுவையில் போட்டுவிட்டது.
தமிழக சட்டமன்ற நிகழ்வுகளை முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்ய தமிழக அரசு ஆவன செய்ய வேண்டுமென மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம் பின்வருமாறு: வெளிப்படையான அரசு நிர்வாகம், பங்கேற்பு ஜனநாயகம் ஆகியவை மக்கள் நீதி மய்யம் தொடங்கிய நாளிலிருந்தே நாங்கள் வலியுறுத்திவரும் அம்சங்கள். சட்டமன்றத்தில் நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்வது மக்கள் பிரதிநிதிகள் பொதுப் பிரச்சினைகள் மீது நிகழ்த்தும் விவாதங்களை சாமானியனும் அறிந்துகொள்ள உதவக்கூடியது.
சட்டமன்ற நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என கோரி 2012-ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கை அதிமுக அரசு சாக்குப்போக்கு சொல்லி நிலுவையில் போட்டுவிட்டது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வோம் என தன் தேர்தல் வாக்குறுதியில் (375 ஆவது வாக்குறுதியில்) திமுக அறிவித்து இருந்தது. ஆனாலும் முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில் கவர்னர் உரையின் முழு நிகழ்வையும் நேரடி ஒளிபரப்பு செய்யவில்லை. இந்திய பாராளுமன்றத்தின் நிகழ்ச்சிகள் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் நேரடியாக ஒளிபரப்பாகின்றன, கேரள சட்டமன்ற நிகழ்வுகள் இணையவழியில் பதிவு செய்யப்படுகிறது. இதற்கென்று தனியாக ஒரு யூடியூப் சேனல் உள்ளது.
நடைபெற இருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் துறை வாரியாக மானிய கோரிக்கை வாதங்கள் முழுவதையும் நேரடி ஒளிபரப்பு செய்ய தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும். தங்களை பாதிக்கும் பிரச்சினைகளில் மாமன்ற உறுப்பினர்களின் கருத்து என்னவாக இருக்கிறது என்பதை பொதுமக்கள் அறிந்து கொள்ள உதவியாக இருப்பதுடன், பத்திரிக்கை, ஊடக நண்பர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கக் கூடும். கொரோனா காலத்தில் அதிக அளவில் ஊடகவியலாளர்கள் சட்டமன்ற வளாகத்தில் கூடுவதை இந்த நேரடி ஒளிபரப்பு குறைக்கக்கூடும். தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் தமிழகத்திற்கு இணையவழி நேரடி ஒளிபரப்பு செய்வது ஒரு சவாலான விஷயமாக இருக்காது. தங்கள் தேர்தல் வாக்குறுதியில் உறுதி அளித்திருந்த நேரடி ஒளிபரப்பை இந்த பட்ஜெட் தொடரிலேயே உறுதி செய்ய ஆவன செய்ய வேண்டுமென தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன். என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.