இந்தியாவின் பெருமையை உலகிற்கு பறைசாற்றுவோம்... ஜி20 ஆலோசனை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு!!

By Narendran SFirst Published Dec 5, 2022, 10:54 PM IST
Highlights

இந்தியாவின் பெருமையை உலகிற்கு பறைசாற்றுவோம் என்று ஜி20 ஆலோசனை கூட்டத்தில் உரையாற்றிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் பெருமையை உலகிற்கு பறைசாற்றுவோம் என்று ஜி20 ஆலோசனை கூட்டத்தில் உரையாற்றிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின் ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், கலந்துக்கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், 2023-ஆம் ஆண்டுக்கான ஜி-20 தலைமையை இந்தியா ஏற்றிருக்கும் வேளையில் நமது பிரதமர் நரேந்திர மோடிக்கு முதற்கண் எனது பாராட்டுகள். இது நம் நாட்டுக்கு மிகவும் பெருமை தரக்கூடிய ஒன்றாகும். உலக அளவில் பல்வேறு நாடுகளிடையே புரிதலை மேம்படுத்துவதில் நாம் மிக முக்கியப் பங்கை ஆற்ற வேண்டியுள்ளது.

இதையும் படிங்க: பாபர் மசூதி இடிப்பு தினம்… கோவை ரயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!!

ஜி-20 நாடுகள் மட்டுமல்லாமல் அனைத்து உலக நாடுகளாலும் இந்தியா கூர்ந்து கவனிக்கப்படுகிறது. அமைதி, அகிம்சை, நல்லிணக்கம், சமத்துவம், சமநீதி ஆகிய உயர் விழுமியங்களை உலக அளவில் கொண்டு செல்ல நமது பிரதமர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்தியா ஜி-20 தலைமையை ஏற்றதைத் தொடர்ந்து நடத்தப்படவுள்ள கருத்தரங்குகளுக்குத் தமிழ்நாடு முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கும் என நான் உறுதியளிக்கிறேன். காலநிலை மாற்றத்தைத் தடுப்பதற்காக இந்திய அரசு நிர்ணயித்துள்ள இலக்குகளை எட்டுவதற்கும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதையும் படிங்க: 28,000 சத்துணவு மையங்களை அரசு மூடுகிறதா ? கிடையவே கிடையாது.! எதிர்க்கட்சிகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் பதிலடி

இயற்கைப் பாதுகாப்பு இயக்கங்களை நிர்வகிக்கவும், காலநிலை மாற்றத்தைக் கையாளவும் தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம் என்ற பெயரில் சிறப்பு நோக்க நிறுவனத்தை (SPV) உருவாக்கியுள்ளோம். உலக அளவில் இந்தியா அளித்துள்ள உத்தரவாதங்களைக் காப்பாற்றுவதற்கு அனைத்து வகையிலும் தமிழ்நாடு உறுதுணையாக இருக்கும். இந்தியாவின் பெருமையை உலகிற்குப் பறைசாற்றுவோம். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசும் வாய்ப்புக்காக நமது மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார். 

click me!