தமிழகத்தில் பாஜகவை கால் ஊன்றவிட மாட்டோம்... சபதம் போடாத குறையாக முத்தரசன்..!

By Asianet TamilFirst Published Jan 26, 2021, 9:39 PM IST
Highlights

திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட் என்பதெல்லாம் முக்கியமில்லை. பாஜகவைத் தமிழகத்தில் கால் ஊன்ற விடக் கூடாது என்பது மட்டுமே எண்ணம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் தெரிவித்தார்.
 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மா நில செயலாள்ர் இரா. முத்தரசன் சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கிராம சபைக் கூட்டம் என்பது சட்டப்பேரவை, நாடாளுமன்றத்துக்கு இணையானது. குடியரசுத் தினத்தில் கிராம சபைக் கூட்டத்தை ரத்து செய்திருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. மக்களின் அடிப்படை உரிமைகளைத் தடுக்கும் செயல் இது. மக்களின் உரிமைகளைப் பறிக்கும் செயல். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் முகக்கவசம்கூட அணியாமல் இருப்பதைப் பார்க்க முடிகிறது. அப்போது கொரோனா தொற்று பரவாதா? கொரோனா தொற்றைக் காரணம் காட்டி கிராம சபைக் கூட்டத்தை தொடர்ந்து ரத்து செய்வது  கண்டிக்கத்தக்கது. கிராம சபைக் கூட்டத்தில் மாநில அரசுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றி விடுவார்கள் என்ற அச்சத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்பதற்காகத் தமிழகத்தில் டிராக்டர் பேரணிக்கு முதல்வர் அனுமதி மறுத்துள்ளார். காவல்துறையைக் கொண்டு வீடு வீடாகச் சென்று டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது. சசிகலா விடுதலைக்கு ஒரு வாரத்துக்கு முன்பு அவருடைய உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதாகக் கூறுவது மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் டெல்லி சென்று பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவைச் சந்தித்து விட்டு வெளியே வந்தவுடன் தமிழகத்துக்கு எவ்வளவு நிதி கேட்டுள்ளோம், எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று எந்தத் தகவல்களையும் அவர் கூறவில்லை. சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக்கொள்ள மாட்டோம் என்று கூறியதால்தான், மக்களுக்கு மட்டுமல்ல எனக்கும் சந்தேகம் எழுந்துள்ளது.


திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் 100 நாட்களில் மக்களின் குறைகள் தீர்த்து வைக்கப்படும் என்று அறிவித்திருப்பதை வரவேற்கிறோம். முருகன் தமிழ்நாட்டுக்குச் சொந்தமானவர். அவரை யார் வேண்டுமானாலும் சொந்தம் கொண்டாடலாம். இது சர்ச்சைக்குரிய விஷயம் அல்ல. சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்றாவது அணி சாத்தியமில்லை. எங்கள் கூட்டணி மிகவும் பலமாக உள்ளது. ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறியது, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஸ்எஸ்தான். ஆனால், அவர் இதுவரை ஒரு முறை கூட ஆணையத்தின் முன்பு ஆஜராகவில்லை. திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட் என்பதெல்லாம் முக்கியமில்லை. பாஜகவைத் தமிழகத்தில் கால் ஊன்ற விடக் கூடாது என்பது மட்டுமே எண்ணம்” என்று முத்தரசன் தெரிவித்தார்.
 

click me!