ஆளும் திமுகவுக்கு முழு ஆதரவை கொடுப்போம்... முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ அதிரடி!!

By Narendran SFirst Published Apr 5, 2022, 7:32 PM IST
Highlights

காவிரி, முல்லை பெரியாறு பிரச்சினைகளுக்கு ஆளும் திமுகவுக்கு முழு ஆதரவை நாங்கள் கொடுப்போம் என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

காவிரி, முல்லை பெரியாறு பிரச்சினைகளுக்கு ஆளும் திமுகவுக்கு முழு ஆதரவை நாங்கள் கொடுப்போம் என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். சொத்து வரி உயர்வைக் கண்டித்தும், சொத்து வரி உயர்வு அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தியும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பயணியர் விடுதி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சரும்  கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர்  ராஜூ  கலந்துக்கொண்டார். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின் வெள்ளை அறிக்கையை வெளியிட்டார்.

அதில், ரூ.4.10 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளது. ஆனால், இவர்கள் 10 மாத ஆட்சியில் ரூ.2.28 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளனர். இதில், யாருடைய ஆட்சி சிறந்த ஆட்சி என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். இது தான் இன்றைய பொருளாதார நிலை. காவிரி, முல்லை பெரியாறு பிரச்சினைகளுக்கு ஆளும் திமுகவுக்கு முழு ஆதரவை நாங்கள் கொடுப்போம். ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என திமுகவினர் வலியுறுத்துகின்றனர். ஆனால், ஆளுநரை நேரில் சந்திக்கும்போது நல்ல ஆளுநர் என கூறுகின்றனர். இது இரட்டை வேடம்.

எங்களது ஆட்சியில் ஆளுநருடன் நல்ல இணக்கத்தில் இருந்தோம். மத்திய அரசுடன் நல்ல உறவுடன் இருந்தோம். உறவுக்கு கைக்கொடுப்போம். உரிமைக்கு குரல் கொடுப்போம் என்பது அதிமுகவின் கொள்கை. இவர்கள் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறுவதால் மக்களுக்கு என்ன நன்மை? பெயரை மாற்றினால் ஒன்றிய அரசு என்றாகிவிடுமா? இவர்கள் அரசியல் செய்கின்றனர். திராவிட மாடல் ஆட்சி என்று கூறுகின்றனர். மாடல் என்றால் மாதிரி என்று பொருள். திராவிட மாதிரி ஆட்சியை தான் மு.க.ஸ்டாலின் கொடுக்கிறார். ஆனால், உண்மையான திராவிட ஆட்சியை கொடுத்தது அதிமுக தான் என்று தெரிவித்தார். 

click me!