
அமைச்சர் ராஜ கண்ணப்பன் செய்தது வன்கொடுமை தடுப்பு சட்டக் குற்றம் ஆகும். அந்தச் சட்டத்தின்படி அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
குலையும் மதசார்பின்மை
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 23-ஆவது மாநில மாநாட்டு பொதுகூட்டம் மதுரையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிஷ்ணன் பங்கேற்றுப் உரையாற்றினார். “மத்தியில் உள்ள பாஜக அரசு மதச்சார்பின்மையைக் குலைக்கும் வகையில் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்கு சில நீதிபதிகளும் துணை போகிறார்கள். பாஜக அரசுக்கு வக்காலத்து வாங்கும் நீதிமன்றங்களையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம். தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக்கும் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மட்டும் 24 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. எனவே, அந்தச் சட்டத்துக்கு ஆபத்து ஏற்படும் வகையிலும் தீர்ப்பு வரலாம்.
ஆர்.எஸ்.எஸ் செயல்களை தடுப்போம்
தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலைக்கு எச்சரிக்கை ஒன்றை விடுகிறேன். தமிழகத்தில் மத பதற்றத்தை ஏற்படுத்தும் செயல்களை செய்தால், உங்களை தமிழகத்தில் இருந்து விரட்டுவோம். அதுபோலவே ஆர்.எஸ்.எஸ் எங்கே இருந்தாலும் அங்கேயும் செல்வோம். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு என்பது ஒரு ஓநாய் கூட்டம். அதன் குகைக்குள் நாங்கள் செல்வோம். மதச்சார்பின்மையைக் குலைக்கும் நோக்கில் ஆர்.எஸ்.எஸ். செய்கிற எல்லா செயல்களையும் நாங்கள் தடுத்து நிறுத்துவோம். கோயில்கள் என்பது இறை நம்பிக்கை வாழ்கிற இடம். அங்கு மதம் கிடையாது. எனவே, கோயில் கமிட்டிகளிலும் கோயில் நிகழ்வுகளிலும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்துகிற பண்பாடு, கலாச்சார பிரச்சாரத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மேற்கொள்ளும்.
ராஜ கண்ணப்பன் மீது பிசிஆர் வழக்கு
கோயில்களில் அபிஷேகம் செய்ய மாட்டோம். ஆனால், மதச்சார்பின்மையைக் காப்பாற்ற வேண்டிய வேலைகள் அனைத்தையும் நாங்கள் செய்வோம். பாஜகவை விரட்டும் போரில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துணையாக நிற்கும். அமைச்சர் ராஜ கண்ணப்பன் விவகாரத்தில் முதல்வர் உடனே கவனம் செலுத்தியது பாராட்டுக்குரிய செயல். ஆனால், ராஜ கண்ணப்பனை துறை மாற்றுவது மட்டுமே தீர்வாகி விடுமா? அவர் செய்தது வன்கொடுமை தடுப்பு சட்டக் குற்றம் ஆகும். அந்தச் சட்டத்தின்படி அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பிடிஓவிற்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன?” என்று கே.பாலகிருஷ்ணன் பேசினார்.