சல்ஜாப்பு காட்டி வரும் அமைச்சர் வேலுமணி... பதவி விலக வலியுறுத்தல்..!

By Thiraviaraj RMFirst Published Jun 19, 2019, 4:29 PM IST
Highlights

தமிழகத்தில் நிகழ்ந்து வரும் குடிநீர் பிரச்சனைக்கு பொறுப்பேற்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேலுமணி உடனடியாக தனது பதவியிலிருந்து விலக வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தி உள்ளார்.
 

தமிழகத்தில் நிகழ்ந்து வரும் குடிநீர் பிரச்சனைக்கு பொறுப்பேற்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேலுமணி உடனடியாக தனது பதவியிலிருந்து விலக வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தமிழகத்தில் சமீபகாலமாக மக்களை வாட்டி வதைத்து வரும் வரலாறு காணாத குடிநீர் பஞ்சத்தை எதிர்கொள்ள எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டு வந்தன. ஆனால், ஆட்சியாளர்கள் விதவிதமான சல்ஜாப்புகளை சொல்லி பொறுப்புகளை தட்டிக்கழித்து வந்தனர்.

நேற்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு சவுக்கடி கொடுக்கிற வகையில் தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்க தமிழக அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கடுமையான குற்றச்சாட்டை கூறியிருக்கிறது. ‘செங்குன்றம் ஏரியில் தண்ணீர் குறைவது முன்பே தெரியாதா? தமிழக அரசிடம் நீர் மேலாண்மை திட்டமே இல்லை, தமிழகத்தில் எந்த நீர்நிலைகளிலும் தூர் வாரப்படவில்லை” என்று குற்றச்சாட்டுக்களை அடுக்கடுக்காக கூறியிருக்கிறது.

இந்த குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு தமிழக ஆட்சியாளர்களுக்கு குறைந்தபட்ச பொறுப்புணர்ச்சி இருக்குமேயானால் உடனடியாக பதவியிலிருந்து விலகுவதைத் தவிர வேறு வழியே இல்லை. ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நாள்தோறும் பத்திரிகையாளர்களை சந்தித்து புதிய வியாக்யானங்களை வழங்கிக் கொண்டிருக்கிறார்.


கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் ரூ.15 ஆயிரத்து 838 கோடி செலவில் குடிநீர் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் சென்னை மாநகரில் ரூ.2638 கோடியும், குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ரூ.5346 கோடியும், சென்னை தவிர்த்து பிற மாநகராட்சி, நகராட்சிகளில் ரூ.4440 கோடியும் குடிநீர் திட்டப் பணிகளுக்காக செலவழிக்கப்பட்டுள்ளதாக கூறியிருக்கிறார். இவ்வளவு தொகை செலவழித்த பிறகும் ஒரு சொட்டு தண்ணீர் கூட புதிதாக இவர்களால் உற்பத்தி செய்ய முடியவில்லை என்று சொன்னால் செலவழிக்கப்பட்ட தொகை என்ன ஆனது. நீர் ஆதாரங்கள் ஏன் பெருகவில்லை?

கடந்த 10 ஆண்டுகளில் எந்த புதிய நீர்ப்பாசன திட்டங்களும் அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்படவில்லை. எந்தளவுக்கு நீர் எடுக்கிறோமோ, அந்தளவுக்கு மழையின் போது நீர் வந்து சேர வேண்டும். அதை செய்வது தான் நீர் மேலாண்மை.கனமழை காலங்களில் சுமார் 260 டி.எம்.சி. நீர் கடலில் வீணாக கலக்கிறது. காவிரியில் மட்டும் சுமார் 90 முதல் 100 டி.எம்.சி. தண்ணீர் தேக்க வழியின்றி கடலுக்குள் போகிறது. சென்ற ஆண்டு மழையின் போது மட்டும் சுமார் 170 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலுக்கு சென்றது. இதையெல்லாம் தடுத்து நீரை சேமிப்பதற்கு அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் நிறைவேற்றிய திட்டம் என்ன? ஒதுக்கிய நிதி எவ்வளவு ?

சென்னை மாநகரின் குடிநீர் பிரச்சனையை தீர்க்க மீஞ்சூர், நெம்மேலியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதைப் போல இன்னும் சில திட்டங்களை நிறைவேற்றியிருந்தால் குடிநீர் பிரச்சனையை தீர்த்திருக்க முடியும்.
மூன்றாவது திட்டத்தை நிறைவேற்றுவதில் ஆளுங்கட்சியினர் தலையீடு காரணமாக நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதற்கு சம்மந்தப்பட்ட அமைச்சரின் தலையீடு தான் காரணம் என்று கூறப்படுகிறது.

மழையின்மையின் காரணமாக ஏற்படுகிற வறட்சியை எதிர்கொள்வது குறித்த நீர் மேலாண்மையை முன்கூட்டியே திட்டமிட்டுத் தான் எதிர்கொள்ள முடியும். ஆனால் தமிழக ஆட்சியாளர்கள் வறட்சி வந்த பிறகு தீர்வுகாண முற்படுவது மிகுந்த வேடிக்கையாக இருக்கிறது. தமிழக குடிநீர் பஞ்சத்தை பொறுத்தவரை அதை எதிர்கொள்வதில் அ.தி.மு.க. அரசு முழுமையாக தோல்வியடைந்து விட்டது.

இதற்கு பொறுப்பேற்று குறைந்தபட்சம் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உடனடியாக பதவி விலக வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று கூறவில்லையே தவிர, குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அமைச்சருக்கு பதவி விலகுவதை தவிர வேறு வழி இருப்பதாக தெரியவில்லை’’ என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 

click me!