விசாகப்பட்டின விஷ வாயு கசிவு , தமிழகத்திற்கு சொல்லும் பாடம் என்ன? சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை.

By Ezhilarasan BabuFirst Published May 8, 2020, 10:52 AM IST
Highlights

ரசாயன தொழிற்சாலைகளின் அருகாமையில் உள்ள குடியிருப்புகளில் வாழும் மக்களுக்கு தொடர்ச்சியாக, "பேரிடர் பயிற்சிகளை நடத்தவேண்டும்.

நேற்று அதிகாலையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள எல்ஜி பாலிமர் நிறுவனத்திலிருந்து  ஸ்டைரீன் வாயு வெளியேறியதால் இதுவரை 11பேர் உயிரிழந்து உள்ளனர், 5,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது,  அந்த பகுதியில் வாழக்கூடியவர்கள். பல கால்நடைகளும் உயிரிழந்துள்ளன. நேற்று இரவு மீண்டும் வாயு கசிவு ஏற்பட்டதால் இன்னும் அதிகமான மக்கள், அதாவது 5கி.மீ சுற்றளவில் உள்ளவர்கள் வெளியேற்றப்பட்டுள்னர். முதலில் ஸ்டைரீன் என்றால் என்ன என்று பார்த்தோமேயானால்,  ஸ்டைரீன் என்கிற கரிம கலவை (organic compound), பாலிமர், நெகிழி (Plastics) மற்றும் பிசின்கள் (resins) உற்பத்தியில் பயன்படுத்தப்படுகிறது. ஸ்டைரீன், ஆக்சிஜனுடன் வினைபுரியும் போது  "ஸ்டைரீன் டை ஆக்சைடாக" பிறழ்ந்து மிகவும் சக்திவாய்ந்த நச்சாக மாறும். நச்சுத்தன்மை கொண்ட வேதியல் பொருட்களை கையாள்வதற்கான விதிகள், 1989இன் கீழ் ஸ்டைரீன், நச்சு  மற்றும் அபாயகரமான (hazadarous) இரசாயனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. 

ஸ்டைரீன் வாயுவை சிறிது நேரம் சுவாசித்தாலே கண் எரிச்சல், குடல் சார்ந்த பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அதிக அளவில் அல்லது அதிக நேரம் சுவாசித்தால் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு வரை போகுமென்றும், புற்றுநோய் உள்ளீட்ட நாள்பட்ட நோய்கள் வருவதற்கு  வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டைரீன் மட்டும் அப்படியே இருந்ததா அல்லது வேறு ஏதாவது வேதியல் கலவைகளுடன் இருந்ததா என்கிற கேள்விகளும் எழாமல் இல்லை.  விசாகப்பட்டினம் ரசாயன ஆலை விபத்துகள் சொல்லும் பாடம் என்ன, குறிப்பாக தமிழகத்திற்கு? தமிழகத்தில் பல்வேறு ரசாயன தொழிற்சாலைகள், பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலைகள், பாலிமர் உற்பத்தி நிறுவனங்கள் செயல்படுகின்றன, அதிகமாக, மணலி, கடலூர், தூத்துக்குடி, பெருந்துறை, நாகப்பட்டினம் மற்றும் இன்னும் சில ஊர்களில் இவை செயல்படுகின்றன.  கொரோனா காலத்தில் ஏற்பட்டுள்ள இந்த விபத்து மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. சமூக விலகலை கடைபிடிக்கவேண்டிய சமயத்தில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்டுள்ள விபத்து கொரோனா தொற்று பரவுவதற்கு காரணாமாக அமைந்துவிடும் ஆபத்து உள்ளது. 

இரட்டை பேரிடர்களை ஒரே நேரத்தில் சந்திப்பது சவால் நிறைந்தது. தமிழகத்தில் உள்ள அனைத்து ரசாயன தொழிற்சாலைகளிலும் பாதுகாப்பு கட்டமைப்புகளை உறுதிசெய்வதற்கான பணிகளை துவங்கவேண்டும்.  அப்பணிகள் முடிவடையும் வரை உற்பத்தியை துவக்க அரசு அனுமதி அளிக்கக்கூடாது.  அனைத்து நிறுவனங்களிலும் உள்ள அளவீட்டு கருவிகள் அனைத்தும் "மறு அளவுத்திருத்தம்" (calibration) செய்யப்பட்டுள்ளதா என்பதை அரசு உறுதி செய்யவேண்டும்.  ரசாயன தொழிற்சாலைகளின் அருகாமையில் உள்ள குடியிருப்புகளில் வாழும் மக்களுக்கு தொடர்ச்சியாக, "பேரிடர் பயிற்சிகளை நடத்தவேண்டும். MSDS என்று சொல்லக்கூடிய மாஸ்டர் டேட்டா ஷீட் எப்போதும் பூர்த்திசெய்யப்பட்டு, அடிக்கடி புதுப்பிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட இடங்களில் வைக்கப்பட்டிருக்கவேண்டும். மேலை நாடுகளில் உள்ள பாதுகாப்பு கட்டமைப்புகளை எந்த விதத்திலும் குறைவில்லாமல் இதைப்போன்ற ரசாயன தொழிற்சாலைகளில் நடைமுறைப்படுத்தவேண்டும். சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கியுள்ள வழிகாட்டுதலை பின்பற்றுகின்றனவா என்பதை  மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்கள் தொடர்ச்சியாக கண்காணிக்கவேண்டும். 

எந்த குறைபாடுகள் இருந்தாலும் அதை சரிசெய்யும்வரை ஆலைகளை செயல்பட அனுமதிக்கக்கூடாது  ரசாயன தொழிற்சாலைகளை ஒரே இடத்தில குவித்து அமைக்க அனுமதிக்க கூடாது. சில தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் வாயு அல்லது திரவம் இன்னொரு தொழிற்சாலையில் உள்ள வாயுவிற்கு எரிபொருளாக மாறலாம், அதனால் கடுமையான பாதிப்புகள் நிகழும். இதைப்போன்ற ரசாயன தொழிற்சாலைகள் சுற்றுச்சூழல் விதிகளை கடைபிடிக்கின்றனவா என்பதை சுதந்திரமான அறிஞர்களை கொண்டு தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும்.  மேற்குலக நாடுகள் இதைப்போன்ற தொழிற்சாலைகளை ஏன் மூன்றாம் உலக நாடுகளில் அமைத்து உற்பத்தி செய்து வாங்கிக்கொள்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு, சூழலின் முக்கியத்துவத்தை அந்நாடுகள் எவ்வாறு உணர்த்துள்ளன என்பதை புரிந்து கொள்ளவேண்டும். இனிமேல் அதிக அளவில் ரசாயன தொழிற்சாலைகள் அமைக்கப்படுவதை தவிர்க்கவேண்டும். 

தமிழகத்தில் உள்ள அனைத்து ரசாயன தொழிற்சாலைகளும் அனுமதிவாங்கப்பட்ட வேதியல் கலவைகளைத்தான் உற்பத்தி செய்கின்றனவா என்பதை தொடர்ந்து கண்காணிக்கவேண்டும். கடலூரில் பெட்ரோலிய கெமிக்கல் ஆலையை அமைக்க ஹல்தியா பெட்ரோகெமிக்கல் நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தையும், நாகையில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தை விரிவாக்கம் செய்ய நிலம் கையகப்படுத்துவதையும் கைவிடவேண்டும். சூழலில் ஏற்பட்ட சீர்கேடுகளும், சூழல் சங்கிலியில் ஏற்பட்ட விரிசல்களும்தான் கொரோனா போன்ற தொற்றுகள் அதிகமாக காரணமாகவுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த பின்னணியில் சூழலை சீர்கெடுக்கக்கூடிய எந்த திட்டத்தையும் அனுமதிக்கக்கூடாது. இதைப்போன்ற ரசாயன தொழிற்சாலைகள் ஏற்படுத்துகின்ற சூழல் சீர்கேடுகள், மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக ஐரோப்பிய நாடுகள் "பயோ பிளாஸ்டிக்ஸ்" ஆய்வுகளை, உற்பத்தியை,  மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டன, நாமும் அதை நோக்கியே பயணப்படவேண்டும் என சுற்று சூழல் ஆர்வலர்களும் மற்றும் பூவுரலகின் நண்பர்கள் அமைப்பினரும் அக் கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். 

click me!