அதிமுக கூட்டணியில் விருதுநர் தொகுதியில் போட்டியிடுடும் தேமுதிக வேட்பாளர் அழகர்சாமிக்கு ஆதரவான பிரச்சாரத்துக்கு வராமல் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் டிமிக்கி கொடுத்து வருவதால் அக்கட்சியினர் கலக்கமடைந்துள்ளனர்.
விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட, திருப்பரங்குன்றம், திருமங்கலம் சட்டசபை தொகுதிகளில், வருவாய் துறை அமைச்சர் உதயகுமாருக்கு செல்வாக்கு அதிகம். இதே நிலைமை தான், இதற்கு முன் அவர் போட்டியிட்டு வென்ற, சாத்துார் தொகுதியிலும் உள்ளது.
அதே நேரத்தில், பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு, சிவகாசி, அருப்புக்கோட்டை, விருதுநகர் தொகுதிகளில் செல்வாக்கு உள்ளது. இந்த இருவரின் செல்வாக்கை பயன்படுத்தியே, தேர்தலில் எளிதில் வெற்றி பெறலாம் என, தே.மு.தி.க., கணக்கு போட்டது.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தேமுதிக ., வேட்பாளர் அழகர்சாமி சந்தித்து, ஓட்டு சேகரிக்கும் பணியிலும் இறங்கி விட்டார். ஆனால், அமைச்சர் உதயகுமார், தேமுதிக வேட்பாளரிடம், 'நாங்கள் உங்களை வெற்றி பெற வைக்கிறோம்' என்ற, வாக்குறுதியை மட்டும் அளித்து விட்டு, தேனி தொகுதியில் போட்டியிடும், துணை முதலமைச்சர் ஓபிஎஸ்ன் மகன், ரவீந்திரநாத்துக்கு ஓட்டு சேகரிக்க, சோழவந்தான் சென்று விட்டார்.
அடுத்து அவரது நிகழ்ச்சியில், உசிலம்பட்டி பெரிய அளவில் இடம் பிடித்து உள்ளது. இதனால், தே.மு.தி.க., வினர் கலக்கத்தில் உள்ளனர். எந்த நேரமும், தன் சட்டசபை தொகுதியான, திருமங்கலத்தையே சுற்றி வந்த உதயகுமார், 20 நாட்களாக தொகுதி பக்கமே வரவில்லை. 'தற்போதும், உசிலம்பட்டி, சோழவந்தான் தொகுதியில், ரவீந்திரநாத்துக்கு ஓட்டு சேகரிக்கிறார்' என தேமுதிகவின்ர் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஆனால் அதை மறுத்துள்ள அமைச்சர் உதயகுமார், ரவீந்திரநாத்தை வெற்றி பெற வைப்பதில், அதிக ஆர்வம் காட்டுவது உண்மை தான். 'ஆனால், என் சொந்த தொகுதியில் போட்டியிடும், கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரித்து முழு அளவில் விரைவில் களமிறங்குவேன் என்று தெரிவித்தார்.