பாய் பிரியாணி கடைன்னா உடனே சீல் வைப்பீர்களா.? சைவத்துக்கு ஒரு நீதி அசைவத்துக்கு ஒரு நீதியா? இந்திய தேசிய லீக்

By Ezhilarasan BabuFirst Published Jun 3, 2022, 1:32 PM IST
Highlights

தமிழக அரசு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அசைவ உணவு ஹோட்டல்களில் உணவு சோதனை என்ற போர்வையில்  அத்துமீறல் நடத்துவதையும் லஞ்சம் கேட்டு மிரட்டுவதையும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி வலியுறுத்தியுள்ளது. 

தமிழக அரசு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அசைவ உணவு ஹோட்டல்களில் உணவு சோதனை என்ற போர்வையில்  அத்துமீறல் நடத்துவதையும் லஞ்சம் கேட்டு மிரட்டுவதையும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அந்த கட்சியின் மாநிலத் தலைவர் தடா ரஹீம் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:- சில மாதங்களுக்கு முன் கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட மாணவி இறந்து விட்டார் என்று ஷவர்மா குறித்து தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் சர்ச்சை கருத்து வெளியிட்டார். 

இரண்டு நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நியூ ஃபைஸ்டார் ஓட்டலில் அசைவ உணவு சாப்பிட்ட சிலருக்கு வாந்தி மயக்கம் என புரளியை கிளப்பி  அந்த அசைவ உணவு விடுதிக்கு சீல் வைத்தனர் சுகாதாரத்துறை அதிகாரிகள். வாந்தி மயக்கம் மற்றும் இறந்தால் சம்மந்தப்பட்ட உணவு உட்கொண்டதால் தான் இந்த உடல் கோளாறு ஏற்ப்பட்டதா என மருத்துவ அறிக்கை வந்த பிறகு அந்த ஓட்டல் மீது நடவடிக்கை எடுப்பது என்பது சட்டவிதிக்கு உட்பட்டது. ஆனால் புகார் வந்த உடனே சம்மந்தப்பட்ட உணவு விடுதிக்கு சீல் வைப்பதும் குறிப்பாக ஓட்டல் உரிமையாளர் முஸ்லிம் என்பதால் துரிதமாக நடவடிக்கை எடுப்பதையும் பார்த்தால் இது திட்டமிட்ட சதியாக தெரிகிறது.

இதே போன்று சைவ உணவு ஓட்டல்களில் இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளது ஆனால் அங்கு எல்லாம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உடனடியாக எந்தவித அவசர நடவடிக்கைகள் எடுப்பதும் இல்லை சைவ உணவு ஓட்டல்களில் சோதனை நடத்துவதும் இல்லை. சுகாதாரத்துறை அதிகாரிகள் அசைவ உணவு ஓட்டல்களுக்கு ஒரு நீதி சைவ ஓட்டல்களுக்கு ஒரு நீதி என்ற பாகுபாடு தொடர்வதை கண்டிக்காது கடந்து செல்ல முடியாது. இன்று கூட சென்னை பல்லாவரம் யா முகைதீன் பிரியாணி ஓட்டலில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை என்ற பெயரில் அத்துமீறல் நடத்தி உள்ளனர். இதே போன்று கடந்த ஆண்டு பிரபலமான அல் ஆசிப் பிரியாணி ஓட்டலை இழுத்து மூடினார்கள். இவர்களின் நடவடிக்கை சைவ உணவு ஓட்டல்களில் நடத்துவது இல்லையே ஏன் ? 

ஒரு சிலருக்கு சில உணவு அதாவது சைவமோ அல்லது அசைவமோ உடல்நலத்திற்கு ஏற்புடையதாக இருக்காது ஆகையால் அவர்களுக்கு எதாவது உடல்நலம் பாதிக்கும் என்பது தெரிந்த விஷயம். உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அசைவ உணவு ஓட்டல்களில் சோதனை என்ற பெயரில் அத்துமீறல் நடத்துவதையும் லஞ்சம் கேட்டு பணம் கொடுக்கவில்லை என்றால் அந்த அசைவ ஓட்டல் மீது நடவடிக்கை எடுப்பதையும் இனி வேடிக்கை பார்க்க முடியாது. ஆகவே மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் அத்துமீறலை தடுத்து நிறுத்த வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக வலியுறுத்துகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

 

click me!