விழுப்புரம் எம்.பி. ரவிக்குமாரை திமுகவை விட்டு நீக்குவாரா மு.க. ஸ்டாலின்... கேட்கிறது பாஜக.!

By Asianet TamilFirst Published Sep 24, 2021, 9:19 PM IST
Highlights

பதவிக்காக பொய் சொல்லி தேர்தலில் நிற்பதும், நீதிமன்றத்தை ஏமாற்றுவதும் நியாயமா என்று பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார். 
 

 நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு கட்சியில் இருந்துகொண்டு திமுக சின்னமான உதயசூரியனில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரவிக்குமார் (விசிக-விழுப்புரம்), சின்னராஜ் (கொமதேக- நாமக்கல்), கணேசமூர்த்தி (மதிமுக - ஈரோடு), பாரிவேந்தர் (இஜக - பெரம்பலூர்) ஆகியோர் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்ற ஒரு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட எம்பி.க்கள், தேர்தல் ஆணையம், திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 
இந்த வழக்கில் அண்மையில் விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் பதில் மனுதாக்கல் செய்தார். அதில், “‘நான் திமுக உறுப்பினர். நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலின்போது திமுக உறுப்பினர் என்ற அடிப்படையில்தான் பாரம்-பி பூர்த்தி செய்து வழங்கப்பட்டுள்ளது. திமுக உறுப்பினர் என்பதற்கு ஆதாரமாக திமுக உறுப்பினர்பட்டியலில் எனது பெயர் உள்ளது. அதற்கான அடையாள அட்டையும் உள்ளது.” என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் ‘பூனா ஒப்பந்தம்’ என்ற பெயரில் நடைபெற உள்ள இணைய வழி கருத்தரங்கில் ரவிக்குமார் பங்கேற்றார். அதுதொடர்பான அழைப்பிதழில் ரவிக்குமாரை விசிக பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டுள்ளனர். 
இதை வைத்து பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “நான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உறுப்பினர் அல்ல. திமுக உறுப்பினர். விசிகவின் வேட்பாளர் திமுகவின்  உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக வழக்கு தொடுக்கப்பட்டிருப்பது உண்மைக்கு புறம்பானது” என்று கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்புதான் உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தார் பாராளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார். 
ஆனால், 24/09/2021 அன்று நடைபெறும் விசிக நிகழ்ச்சியில், அந்த கட்சியின் பொது செயலாளராக பங்கு பெறுகிறார். இது நீதிமன்ற அவமதிப்பு இல்லையா? மேலும், தாங்கள் எதை செய்தாலும் மக்கள் கண்டுகொள்ள மாட்டார்கள் என்று நினைப்பது, மக்களை அவமதிக்கும் செயல் இல்லையா? முதல்வர் மு.க. ஸ்டாலின், ரவிக்குமாரை திமுகவிலிருந்து நீக்குவாரா? தொல். திருமாவளவன் நீதிமன்றத்தையும், மக்களையும் மதிப்பாரா? ரவிக்குமார் தன் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வாரா? தமிழக ஊடகங்கள் இது குறித்து கேள்வி எழுப்புமா? பதவிக்காக பொய் சொல்லி தேர்தலில் நிற்பதும், நீதிமன்றத்தை ஏமாற்றுவதும் நியாயமா?” என்று நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார். 

click me!