முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வலது கரமாக விளங்கும் கோவை பகுதியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் மோடிக்கு நெருக்கமான முக்கிய புள்ளி மூலம் தமிழக முதலமைச்சராக முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தற்போது வரை மிகவும் நம்புவது கொங்கு மண்டல அமைச்சர்களான தங்கமணியையும் வேலுமணியையும் தான். பாஜக, பாமக மற்றும் தேமுதிகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி அதை வெற்றிகரமாக முடித்தவர்கள் இவர்கள் இருவரும் தான்.
இதனால் மற்ற அமைச்சர்களுக்கு அவர்கள் இருவர் மீதும் கடும் கோபம் இன்று வரை இருந்து வருகிறது. இந்நிலையில் தான் அமைச்சர் வேலுமணி புதிய ஐடியா ஒன்றை செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சரின் தொகுதிக்குட்பட்ட பகுதியில் ஆசிரமம் நடத்திக் கொண்டிருக்கும் ஜக்கி வாசுதேவும், அமைச்சர் வேலுமணியும் ரகசியமாக சந்தித்துப் பேசியுள்ளனர். எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கையில் அதிமுகவினர் அதிருப்தி அடைந்துள்ளதாகவும், இந்த தேர்தலில் ஓட்டுக்காக கொடுத்த பணம் பாதிக்கு மேல் அதிமுக வாக்காளர்களுக்கு போய்ச் சேரவில்லை என்றும் பேசியிருக்கின்றனர்.
அது மட்டுமல்லாமல் அதிமுகவினர் ஊழல் செய்து சம்பாதித்துள்ள பணம் அது, அதை மக்கள் வாங்கிக் கொள்வார்கள் ஆனால் வாக்களிக்க மாட்டார்கள் எனறு அதிமுவினரே பேசுவதாகவும் அதை நம்பிய அதிமுக நிர்வாகிகள் பணத்தைக் கொடுக்காமல் அமுக்கிக் கொண்டார்கள் என்றும் பேசப்படுவதாக அமைச்சர் வேலுமணி ஜக்கியிடம் கூறியிருக்கிறார்.
இதே போல் பல அமைச்சர்கள் கைகளில் கொடுக்கப்பட்ட பணமும் முழுவதுமாக வாக்காளர்களுக்கு போய்ச் சேரவில்லை என்பதே உண்மை என்றும் அவர்கள் பேசியிருக்கிறார்கள்.
தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி யாரையும் தடடிக் கேட்க முடியாத நிலையில் உள்ளார். கட்சியையும், ஆட்சியையும் சீரழித்துவிட்டார். இனி அவரை நம்பி அரசியல் செய்ய முடியாது என்றும், உங்களுக்கு டெல்லியில் இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி, என்னை முதலமைச்சராக்குங்கள், நான் எல்லாவற்றையும் சரி செய்கிறேன் எனவும் அமைச்சர் ஜக்கியிடம் வலியுறுத்தி இருக்கிறார்.
இதற்கு தலையாட்டிய ஜக்கி இது தொடர்பாக பாஜக முக்கிய பிரமுகர்களிடம் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. இடைத் தேர்தலில் அதிமுக அரசு தப்பிப் பிழைத்தால், வேலுமணிதான் முதலமைச்சர் என அவரது ஆதரவாளர்கள் தற்போது கூறி வருகின்றனர்.