தமிழக அரசின் நடவடிக்கை மிகுந்த வலியையும்,ஏமாற்றத்தையும் அளிக்கிறது- திமுகவிற்கு எதிராக சீறிய வேல்முருகன்

By Ajmal KhanFirst Published Jan 2, 2023, 12:10 PM IST
Highlights

 கொரோனா காலத்தில் மகத்தான சேவை ஆற்றிய செவிலியர்கள் பணி நீக்கம் என்ற அரசாணை மிகுந்த வலியையும், வேதனையையும் அளிக்கிறது. பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்களை, மாவட்ட சுகாதாரக் குழுமத்தின் கீழ் தற்காலிக பணியாளர்களாக பணி அமர்த்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருப்பது ஏமாற்றம் அளிக்கிறது என வேல்முருகன் தெரிவித்துள்ளார். 

செவிலியர்கள் பணி நீக்கம்

செவிலியர்கள் பணி நீக்கம் தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல் முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி இருந்த நேரத்தில், கொரோனா நோய் சிகிச்சை பிரிவில் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு எழுதி காத்திருப்பில் இருந்த செவிலியர்களை தமிழ்நாடு அரசு,  கடந்த 2020ஆம் ஆண்டு, 14 ஆயிரம் ரூபாய் ஊதியத்தில் சுமார் 2, 400 செவிலியர் பணி வழங்கி உத்தரவிட்டது. கொரோனா தொற்று தீவிரமாக இருந்த காலத்தில் இரண்டரை ஆண்டுகள், தங்களது உயிரை பணயம் வைத்து,  கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கினர். தங்களது குடும்பத்தை கூட கவனிக்க முடியாமல், பல்வேறு சிரமங்களுக்கு இடையே செவிலியர்கள் ஆற்றிய சேவை மகத்தானது.

தமிழகத்தை கைப்பற்ற செம பிளான் போட்ட பாஜக..!! நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரத்தில் மோடி போட்டியா.?

ஏமாற்றம் அளிக்கிறது

இந்நிலையில், கொரோனா காலத்தில் மகத்தான சேவை ஆற்றிய செவிலியர்கள் பணி நீக்கம் என்ற அரசாணை மிகுந்த வலியையும், வேதனையையும் அளிக்கிறது. பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்களை, மாவட்ட சுகாதாரக் குழுமத்தின் கீழ் தற்காலிக பணியாளர்களாக பணி அமர்த்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில், செவிலியர் பணியிடங்கள் காலியாக உள்ளது.

நற்பெயருக்கு களங்கம்

இந்நிலையில், கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களை நியமித்து பணி நிரந்தரம் செய்யாமல், தற்காலிக செவிலியர்களாக மாற்றும் நடவடிக்கை தமிழ்நாடு அரசின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும். எனவே, மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இவ்விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, கொரோனா காலத்தில் மகத்தான சேவையாற்றிய செவிலியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது என வேல்முருகன் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்

கனிமொழி கூட்டத்தில் பெண் காவலருக்கு திமுக நிர்வாகி பாலியல் தொல்லை.!அதிகார மமதையின் வெளிப்பாடு -அண்ணாமலை ஆவேசம்

click me!