
மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளக் கூடாது என்பதற்காகவே தான் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தன்னுடன் 25 ஆண்டுகள் பயணித்த குருவின் மறைவை தன்னால் தாங்க கொள்ளமுடியவில்லை என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கண்ணீர்விட்டு கதறி அழுதார்.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22-ந் தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது கலவரம் வெடித்தது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலி ஆனார்கள். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்..
அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் தடையை மீறி தூத்துக்குடி சென்றார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இன்று காலை அவர் திருக்கோவிலூர் கொண்டுவரப்பட்டு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சுங்கச்சாவடியை சேதப்படுத்திய வழக்கில் அவரை நீதிபதி புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து சென்னை கொண்டு செல்லுமுன் செய்தியாளர்களிடம் பேசிய வேல் முருகன், மத்திய, மாநில அரசுகள் மனித மாண்புகளை மதிக்கவில்லை என குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர் தனது 25 ஆண்டு கால நண்பர் காடுவெட்டி குரு மறைவு பேரிழப்பு என்று கூறிய அவர் கதறி அழுதார்.
குருவின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளக் கூடாது என்பதற்காகவே தன்னை ஆட்சியாளர்கள் கைது செய்துள்ளதாக தெரிவித்தார். பின்னர் தொண்டர்களைப் பார்த்து குருவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துங்கள் என வேண்டுகோள் விடுத்தார்.
அப்போது வேல்முருகன் சென்ற வாகனத்தை தொண்டர்கள் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.