Veda Nilayam case : போயஸ் கார்டன் ஜெயலலிதா வீடு நினைவிடம் வழக்கு.. திமுக அரசு மேல்முறையீட்டை கைவிட்டது ஏன்.?

By Asianet TamilFirst Published Dec 20, 2021, 10:02 PM IST
Highlights

ஒரு வேளை அதிமுக அரசாக இருந்திருந்தால், இத்தீர்ப்பை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையீடு செய்திருக்கும். ஆனால், திமுக அரசு அதில் ஆர்வம் காட்டவில்லை.

ஜெலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா நிலையம் வீட்டை நினைவிடமாக்கும் வகையில் திமுக அரசு ஏன் மேல் முறையீடு செய்யவில்லை என்பது தெரிய வந்துள்ளது

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா நிலைய வீட்டை அதிமுக அரசு அரசுடடமையாக்கி சட்டம் கொண்டு வந்தது. அந்த வீட்டுக்கான இழப்பீடாக பணத்தையும் நீதிமன்றத்தில் அரசு செலுத்தியது. இதனையடுத்து இந்த ஆண்டு ஜனவரியில் ஜெயலலிதா நினைவிட வீட்டை எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். இதை எதிர்த்து ஜெயலலிதாவின் இரண்டாம் ரத்த வழி சொந்தமான தீபாவும் தீபக்கும் வழக்கு தொடர்ந்தார்கள். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், “வேதா நிலையத்தின் சாவியை ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா, தீபக் ஆகியோரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டது. 

இதனையத்து தீபாவும் தீபக்கும் வேதா இல்ல சாவியைக் கேட்டு அரசிடம் மனு அளித்தனர். அதனையேற்று வேதா நிலையத்தின் சாவி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒரு வேளை அதிமுக அரசாக இருந்திருந்தால், இத்தீர்ப்பை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையீடு செய்திருக்கும். ஆனால், திமுக அரசு அதில் ஆர்வம் காட்டவில்லை. என்றாலும், தனி நீதிபதி சேஷசாயி வழங்கிய தீர்ப்பை எதிர்த்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை நிர்வாகி என்ற முறையில் அவர் தொடர்ந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தது. அப்போது, வேதா நிலையத்தை அரசுடமையாக்கிய சட்டம் செல்லாது என்று பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அதிமுகவுக்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் விசாரணையை ஒத்திவைத்தது.

அதன்படி இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யாதது  குறித்து தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதன்படி, ‘ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதை ஏற்று மேல்முறையீடு செய்யவில்லை.  தனி நீதிபதியின் உத்தரவை ஏற்று வேதா நிலைய சாவி தீபா, தீபக்கிடம் ஒப்படைக்கப்பட்டது” என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. 

click me!