வேல் யாத்திரைக்காக பாஜக நீதிமன்றமே போனாலும் கறாரா இருங்க.. தமிழக அரசுக்கு திருமாவின் கோரிக்கை..!

By Asianet TamilFirst Published Nov 5, 2020, 8:43 PM IST
Highlights

வேல் யாத்திரைக்கு அனுமதி கோரி பாஜக உச்ச நீதிமன்றம் சென்றாலும் தமிழக அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 
 

இதுதொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாஜக நடத்தவிருந்த வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்கப் போவதில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த முடிவை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பாராட்டி வரவேற்கிறோம். நவம்பர் 6ம் தேதி முதல் டிசம்பர் 6ம் தேதி வரை ஒரு மாத காலத்துக்கு தமிழ்நாட்டில் வேல் யாத்திரை நடத்தப்போவதாக பாஜக அறிவித்திருந்தது. கொரோனா பெருந்தொற்றின் காரணமாக மாநிலம் முழுவதும் பொது முடக்கம் இன்னும் முழுமையாக விலக்கிக் கொள்ளப்படாத நிலையில், அரசியல் நடவடிக்கைகளை அரசு அனுமதிக்காத சூழலில் இந்த வேல் யாத்திரைக்கான அறிவிப்பு செய்யப்பட்டது.

இதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்தன. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் காவல்துறை தலைமை இயக்குனரை சந்தித்து அவரிடம் இந்த யாத்திரைக்கு அனுமதி அளிக்கக் கூடாது என கடிதமும் அளிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டில் வெவ்வேறு ஊர்களில் நடந்த பல்வேறு வன்முறைச் சம்பவங்களை மதக்கலவரமாக மாற்றுவதற்கு எப்படியெல்லாம் பாஜக முயற்சித்தது, அவற்றைக் காவல்துறை எவ்வாறு தடுத்தது என்பதையெல்லாம் குறிப்பிட்டதுடன், பாஜகவின் நோக்கம் தமிழ் நாட்டில் மத ரீதியான கலவரம் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடுவதுதான் என்பதையும், அதற்கு இந்த சம்பவங்களே சான்றுகளாக இருக்கின்றன என்பதையும் சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்க இந்த யாத்திரைக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்தால் மீண்டும் அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வரக்கூடும். அப்போதும் அனுமதி கிடைக்காவிட்டால் உச்ச நீதிமன்றத்தையும் அவர்கள் நாடக் கூடும். அங்கெல்லாம் தமிழக அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.” என்று அறிக்கையில் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

click me!