பாத்திமா லத்தீப் மரணத்துக்கு சனாதன சக்திகளே காரணம்... திருமாவளவன் அதிரடி குற்றச்சாட்டு!

By Asianet TamilFirst Published Nov 14, 2019, 9:13 PM IST
Highlights

உயர்கல்வி நிறுவனங்களில் தலைவிரித்தாடும் சாதி-மதவெறி வன்கொடுமைகளால் மாணவ மாணவியரின் தற்கொலைகள் தொடர்கின்றன. இத்தகைய தற்கொலைகளுக்கான காரணங்களைக் கண்டறிய விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும். கல்வி நிறுவனங்களில் தலித், பழங்குடியினர் , பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த மாணவர்களின் மீது நிகழ்த்தப்படும் சாதி, மதரீதியான ஒடுக்குமுறைகளுக்கும் வன்கொடுமைகளுக்கும் அரசு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மாணவ மாணவிகள் சாதி மதரீதியான நெருக்கடிகளுக்கும் மனஅழுத்தத்திற்கும் ஆளாகாமல் கல்வி கற்கும் வகையில் சமத்துவத்தை ஏற்படுத்த வேண்டும்.
 

உயர்கல்வி நிறுவனங்களில் ஆதிக்கம் செலுத்தும் சனாதன சக்திகளின் வெறுப்பே பாத்திமா லத்தீஃப் உள்ளிட்ட மாணவ, மாணவிகளின்  பலிகளுக்குக் காரணம் என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். 
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:


 “சென்னை ஐஐடியில் முதுகலை முதலாமாண்டு பயின்றுவந்த கேரளாவைச் சேர்ந்த ஃபாத்திமா லத்தீஃப் கடந்த நவம்பர்-9 அன்று தனது விடுதி அறையில் தூக்குமாட்டித் தற்கொலை செய்துகொண்டார் என்பது மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. “தனது சாவுக்குத் தனது பேராசிரியர் ஒருவரே காரணம்” என்று பெயரைக் குறிப்பிட்டுள்ள ‘தற்கொலைக் குறிப்பை’க் காவல்துறையினர் கண்டெடுத்துள்ளனர். இது மேலும் கூடுதல் அதிர்ச்சியை அளித்துள்ளது. ஐ.ஐ.டி. உயர்க் கல்வி நிறுவனங்களில் இதுபோன்ற அவலங்கள் அரங்கேறுவது தொடர்கதையாக உள்ளது. தலித் சமூகத்தைச் சார்ந்த மாணவர்கள் ரோஹித்வெமுலா, முத்துக்கிருஷ்ணன் போன்றவர்களின் வரிசையில் தற்போது இஸ்லாமிய மாணவி ஃபாத்திமாவும் பலியாகியுள்ளார்.


உயர்கல்வி நிறுவனங்களில் ஆதிக்கம் செலுத்தும் சனாதன சக்திகளின் வெறுப்பே இத்தகைய பலிகளுக்குக் காரணம். பேராசிரியர்கள் சுதர்சன் பத்மநாபன், மில்ந்த் பிராமே, ஹேமச்சந்திரா காரா ஆகிய பெயர்களை மாணவி ஃபாத்திமா குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது. எனவே, இதை தற்கொலை எனக் கருதாமல் நிறுவனக் கொலையாகவே கருத வேண்டியிருக்கிறது. ஆக, இதைக் கொலை வழக்காகவே பதிவுசெய்து மாணவியின் சாவுக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்து சிறைப்படுத்த வேண்டும்.


உயர்கல்வி நிறுவனங்களில் தலைவிரித்தாடும் சாதி-மதவெறி வன்கொடுமைகளால் மாணவ மாணவியரின் தற்கொலைகள் தொடர்கின்றன. இத்தகைய தற்கொலைகளுக்கான காரணங்களைக் கண்டறிய விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும். கல்வி நிறுவனங்களில் தலித், பழங்குடியினர் , பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த மாணவர்களின் மீது நிகழ்த்தப்படும் சாதி, மதரீதியான ஒடுக்குமுறைகளுக்கும் வன்கொடுமைகளுக்கும் அரசு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மாணவ மாணவிகள் சாதி மதரீதியான நெருக்கடிகளுக்கும் மனஅழுத்தத்திற்கும் ஆளாகாமல் கல்வி கற்கும் வகையில் சமத்துவத்தை ஏற்படுத்த வேண்டும்.
மாணவி ஃபாத்திமா அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். பலியான மாணவியின் குடும்பத்துக்கு இழப்பீடாக மத்திய அரசு ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும்” என திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

click me!