பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் செய்த வன்முறைகளை விசாரிக்க வேண்டும்..!! போலீஸ் நண்பர்களை விடாமல் விரட்டும் விசிக..!!

By Ezhilarasan BabuFirst Published Jul 9, 2020, 10:12 AM IST
Highlights

போலீஸ் நண்பர்கள் அமைப்பில் பல்வேறு மதவாத அமைப்பினரும்  இடம் பெற்றிருந்ததாகவும், அவர்கள் காவல்துறையினருடன் சேர்ந்துகொண்டு காவல் நிலையங்களில் பல்வேறு வன்முறைச் செயல்களில் ஈடுபட்டதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. 

பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் வன்முறையில் ஈடுபட்டார்களா என்பதை விசாரிக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை வைத்துள்ளது. இது குறித்த அக்கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- சாத்தான்குளம் காவல் நிலைய படுகொலைக்குப் பிறகு அந்தப் படுகொலையில் போலீஸ் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு பங்கு இருக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது, அதையொட்டி அந்த அமைப்பை தடை செய்ய வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் வலியுறுத்தினோம். அந்த கோரிக்கையை ஏற்று இப்போது அந்த அமைப்பு முற்றாக கலைக்கப்படுகிறது என ஆணை பிறப்பித்து இருப்பதை வரவேற்கிறோம்.

இதுதொடர்பாக வழக்கறிஞர் ஒருவர் அளித்த புகாரை விசாரித்த மாநில மனித உரிமை ஆணையம், இந்த அமைப்பு சட்டப்படியாக உருவாக்கப்பட்ட அமைப்பா? அவ்வாறெனில் அதன் விவரங்களை தர வேண்டும் என அரசுத் தரப்பிடம் கேட்டிருந்தது. இதனிடையில் இந்த அமைப்பு கலைக்கப்பட்டுள்ளது, போலீஸ் நண்பர்கள் அமைப்பில் பல்வேறு மதவாத அமைப்பினரும்  இடம் பெற்றிருந்ததாகவும், அவர்கள் காவல்துறையினருடன் சேர்ந்துகொண்டு காவல் நிலையங்களில் பல்வேறு வன்முறைச் செயல்களில் ஈடுபட்டதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. எனவே உண்மை நிலை என்ன என்பதை அறிவதற்கு இதுதொடர்பாக விசாரணை ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். காவலில் நிகழும் வன்முறைகள் குறித்து புகார்கள் தெரிவிப்பதற்காக சுயேச்சையான ஒரு அமைப்பை நிறுவ வேண்டும் என்று 2006ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் மாநில அரசுகளுக்கு ஆணை பிறப்பித்தது.

ஆனால் தமிழ்நாட்டில் அந்த அமைப்பு உருவாக்க படாமலேயே இருந்தது, இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சூரிய பிரகாசம் என்பவர் வழக்கு தொடுத்த பின்னரே 2019 ஆம் ஆண்டில் இந்த அமைப்பை உருவாக்கி தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக உள்துறைச் செயலாளரின் தலைமையிலும் மாவட்ட அளவில் ஆட்சியர்களின் தலைமையிலும் இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் காவல் வன்முறைகள் தொடர்பான தமிழக நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை, எனவே உச்சநீதிமன்ற ஆணையின்படி ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் முறைப்படி அந்த புகார் அமைப்பை உடனே  நிறுவிடுமாறு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

click me!