
கால்நடை வர்த்தகத்தில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் மத்திய அரசு மீது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
சிறுபான்மையின மக்களை நசுக்கும் என்ற குற்றச்சாட்டு பிரதானமாக முன்வைக்கப்படும் நிலையில், வர்த்தகத்தின் போது விலங்குகள் துன்புறுத்தப்படுவதைத் தடுக்க இப்புதிய விதிகள் என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
மாட்டிறைச்சி விவகாரத்தில் தேசிய கட்சிகள் தொடங்கி மாநில கட்சிகள் வரை மோடி தலைமையிலான மத்திய அரசை விமர்சனங்களாலும், கண்டன அறிக்கைகளாலும் காய்ச்சி எடுத்து வருகின்றனர்.
அதிமுகவின் இரு அணிகளைத் தவிர ஏனைய அனைத்து தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும் நடுவன் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் இவ்விவகாரம் குறித்துப் பேசுகையில், மாட்டிறைச்சி மீதான இத்தடை உத்தரவு சமூகத்தில் போரை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இம்முடிவினை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த தொல்.திருமாவளவன், திமுக தலைவர் கருணாநிதியின் வைர விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் பஙே்கேற்கும் என்றார். இதனை யாரும் அரசியல் நிகழ்வாகக் கருதக் கூடாது என்றும் அவர் கூறினார்.