தமிழகத்தின் முதல் விரோதி ஆளுநர் ரவி..! நாகலாந்தில் மக்கள் விரட்டி அடித்தது போல தமிழ்நாட்டிலும் நடக்கும்- வைகோ

By Ajmal KhanFirst Published Jun 6, 2023, 8:35 AM IST
Highlights

முதல்வர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணத்தை இழிவுப் படுத்தி ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலகால விஷத்தைக் கக்கி இருப்பதாக தெரிவித்துள்ள வைகோ ஆளுநரின் பேச்சும் செயல்பாடுகளும் எல்லை மீறி போய் கொண்டு இருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது என தெரிவித்துள்ளார். 

முதலமைச்சர் வெளிநாடு பயணம்

உதகையில் நடைபெற்ற பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, நாம் கேட்பதாலோ, நேரில் சென்று தொழிலதிபர்களுடன் பேசுவதாலோ முதலீடுகள் வராது. உலகளாவிய பெரும் தொழில் அமைப்புகளுக்கான சிறந்த சூழலை உருவாக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த கருத்து தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,உதகையில் நடைபெற்ற பல்கலைக் கழக துணை வேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டார், இந்த மாநாட்டில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, "தமிழ்நாட்டுக்கு இணையான முதலீடுகளை ஹரியாணா மாநிலம் ஈர்த்து வருகிறது.

எல்லை மீறி செல்லும் ஆளுநர் ரவி

நாம் கேட்பதாலோ, நேரில் சென்று தொழிலதிபர்களுடன் பேசுவதாலோ முதலீடுகள் வராது. முதலீடுகளை ஈர்க்கத் திறமையான மற்றும் பொருத்தமான மனித ஆற்றலை உருவாக்குவதே சிறந்த வழியாக இருக்கும். உலகளாவிய பெரும் தொழில் அமைப்புகளுக்கான சிறந்த சூழலை உருவாக்க வேண்டும்." என்று பேசியுள்ளார். சிங்கப்பூர், ஜப்பானுக்கு 9 நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுவிட்டுத் திரும்பி இருக்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்தப் பயணத்தில் ஐ.பி நிறுவனம், டைசல் நிறுவனம், ஹோம்ரான் ஹெல்த்கேர் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுடன் ரூ.3,233 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தமிழக முதல்வர் சொல்லி இருக்கிறார்.

மக்கள் விரட்டி அடிப்பார்கள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வெளிநாட்டுப் பயணத்தை இழிவுப் படுத்தி ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலகால விஷத்தைக் கக்கி இருக்கிறார். ஆளுநரின் பேச்சும் செயல்பாடுகளும் எல்லை மீறி போய் கொண்டு இருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது. தமிழ்நாட்டின் முதல் விரோதியாக விளங்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியை வெளியேற்ற வேண்டும். இல்லையேல் நாகலாந்து மாநிலத்தில் மக்கள் விரட்டி அடித்தது போல தமிழ்நாட்டிலும் நடக்கும் என வைகோ விமர்சித்துள்ளார் 

இதையும் படியுங்கள்

“வெளிநாடு செல்வதால் முதலீடுகள் வராது..” முதல்வர் மு.க ஸ்டாலினை தாக்கி பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி

click me!