ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு துரோகம்! வைகோ கண்டனம்...

By Ezhilarasan BabuFirst Published Mar 23, 2021, 6:54 PM IST
Highlights

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடக்கும் காரணத்தினால்தான் இலங்கை அரசுக்கு சாதகமாக வாக்களிக்காமல் இந்தியா வெளியேறியது, அவர்கள் தமிழர்களுக்கு எதிராக வாக்களித்து இருப்பார்கள்

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடக்கும் காரணத்தினால்தான் இலங்கை அரசுக்கு சாதகமாக வாக்களிக்காமல் இந்தியா வெளியேறியது, அவர்கள் தமிழர்களுக்கு எதிராக வாக்களித்து இருப்பார்கள் என வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்;- இலங்கைத் தீவில் சிங்கள இனவாத அரசு, ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடத்தியது போர்க் குற்றம் அல்ல, அப்பட்டமான இனப்படுகொலை. ஒரு இலட்சத்து 37 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன. 

2009 தொடக்கத்தில், தமிழர்களை பட்டினி போட்டு கொன்றது இலங்கை அரசு. இதுகுறித்து, சர்வதேச சமுதாயம் தன் கடமையில் தவறியது. எனினும், அண்மையில் பிரிட்டன், ஜெர்மனி, கனடா, வடக்கு மாசிடோனியா, மாண்டினிரோ, மலாவி ஆகிய ஆறு நாடுகள் இலங்கையின் போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா.வின் மனித உரிமைக் கவுன்சிலில் தீர்மானம் கொண்டுவந்தன. இந்திய அரசு, இலங்கையை ஆதரிக்கும் என்று இலங்கை வெளிவிவகாரத்துறைச் செயலாளர் ஜெயநாத் கொலம்பிகே நான்கு நாட்களுக்கு முன்பு கூறினார்.

அதேபோல இன்று, இந்திய அரசின் பிரதிநிதி வாக்கெடுப்பில் பங்கெடுக்காமல் வெளிநடப்புச் செய்தார். இது ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு செய்த மன்னிக்க முடியாத பச்சை துரோகம் ஆகும். தமிழ்நாட்டில் தேர்தல் நடப்பதால், ஏமாற்றுவதற்காக வெளிநடப்புச் செய்தார்கள். இல்லையேல், இலங்கைக்கு ஆதரவாகவே ஓட்டுப்போட்டு இருப்பார்கள். இந்திய அரசு செய்த துரோகத்துக்கு என்னுடைய பலத்த கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என  அதில் கூறப்பட்டுள்ளது.

click me!