
அதிமுக அரசு ஒவ்வொரு பிரச்சனைகளிலும் மத்திய அரசுக்கு அடிபணிந்துள்ளதாகவும், மாநில அரசை முனிசிபாலிட்டியைவிட தரம்கெட்டதனமாக மத்திய அரசு பாவிப்பதாகவும் மதிமுக செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
மதிமுக பொது செயலாளர் வைகோ, மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், தமிழகத்தில் டெங்குவைக் கட்டுப்படுத்த அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். டெங்கு தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கலாம் என்ற அவர், அபராதம் விதிப்பது முறையல்ல என்றார்.
அதிமுக அரசு ஒவ்வொரு பிரச்சனையிலும் மத்திய அரசுக்கு அடிபணிந்துள்ளது என்றும் தமிழக நலனில் மத்திய அரசு அக்கறை காட்டவில்லை என்றும் வைகோ கூறினார்.
நாடு முழுவதும் மாநில அரசுகளின் மேல் தனது ஆக்டோபஸ் கரங்களை மத்திய அரசு நீட்டி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மாநில அரசை நகராட்சியைவிட தரம் கெட்டதனமாக மத்திய அரசு பாவிக்கிறதாகவும் அவர் கடுமையாக கூறினார்.
தமிழகத்தில் சர்க்கரை விலை ஏற்றம் மக்களை பாதிக்காது என்று என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருப்பது ஏற்புடையதல்ல என்றார்.
பருவமழையால் வெள்ளம் ஏற்பட்டால் சரியான நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயாராக இருக்க வேண்டும்.
விவசாயிகளுக்கு 2 ஆண்டுகளாக பயிர் காப்பீட்டுத் தொகை நிவாரணம் வழங்கப்படவில்லை என்றும் இதனைக் கண்டித்து நாளை மறுநாள் கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தார்.
அரசியலுக்கு வருவதற்கும், கட்சி தொடங்குவதற்கும், தேர்தலில் நிற்பதற்கும் அனைவருக்கும் உரிமை உண்டு. அதற்கு மக்கள்தான் தீர்ப்பளிக்க வேண்டும் என்றார்.