
தினகரனிடம் தான் இப்போது ஆட்சி இருக்கிறது. அதிகாரம் அவரது கைகளில்தான் இருக்கிறது. அதனால் உளவுத்துறையின் நோக்கம் அவருக்குத் தெரியும் என்று அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் கூறியுள்ளார்.
டிடிவி தினகரனிடம் தான் இப்போது ஆட்சி இருக்கிறது என்றும், அதிகாரம் அவரது கைகளில்தான் உள்ளது என்றும் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் கூறியுள்ளார்.
மதுசூதனன், கடலூரில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன் என்றார்.
நான்தான் அதிமுக என்று கூறிவரும் தினகரனிடம் அதிமுக உறுப்பினர் அட்டை உள்ளதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். 1983 ஆம் ஆண்டு வரை வாடகை வீட்டில் இருந்தவர்தான் சசிகலா. தற்போது சசிகலாவுக்கும் நடராஜனுக்கும் எப்படி இவ்வளவு சொத்துக்கள் வந்தது? என்பது குறித்து விசாரணை நடத்தினால் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும் என்று கூறினார்.
தினகரன் கையில் இன்னமும் அதிகாரம் உள்ளது. உளவுத்துறை தகவல்கள் அவருக்கு வருகிறது. எனவே அவர் கூறுவது உண்மையாக கூட இருக்கலாம்.
நடிகர்கள் அரசியலுக்கு வர விரும்புகிறார்கள். அவர்கள் மக்களின் பிரச்சனைகளுக்காக போராடி உள்ளார்களா? என்றும் அடிமட்ட தொட்ணடர்களின் பிரச்சனைகளுக்காக போராடி சிறை சென்றனரா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
உண்மையான அதிமுக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது ஒருங்கிணைப்பில் செயல்படுகிறது என்றார். எங்களுக்கே இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்றும், தற்போது இருக்கும் மனக்கசப்புகள் அனைததும் நீங்கி அனைவரும் ஒற்றுமையாக இருப்பார்கள் என்றும் மதுசூதனன் கூறினார்.