
அதிமுக கட்சியைப் பற்றியோ, எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா குறித்து பேசவோ டிடிவி தினகரனுக்கு எந்த அருகதையும் இல்லை என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.
தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அதிமுகவின் பெயர் மற்றும் சின்னம் தங்களுக்கு கிடைக்கும் என்று டிடிவி தினகரன் தெரிவித்தது குறித்த கேள்விக்கு, கனவு காண்பதற்கு எல்லாருக்கும் உரிமை உள்ளது என்றும். அவரும் அது போலவே கனவு காணலாம் என்றும் கூறினார்.
இரட்டை இலை சின்ன தொடர்பான விசாரணை நாளை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது என்றும் அப்பொழுது உண்மை வென்று விடும் என்றும் சி.வி. சண்முகம் கூறினார்.
இரட்டை இலை சின்னத்தை நிரந்தரமாக முடக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்தவர்தான் தினகரன் என்றார்.
அதிமுக கட்சியைப் பற்றியோ, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா குறித்து பேசவோ தினகரனுக்கு எந்த அருகதையும் இல்லை என்று கூறினார். அதிமுக கட்சிக்கு தினகரன் ஒரு துரோகி என்றும் கூறினார்.
தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த பிரமானப் பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று தினகரன் தரப் கோரிக்கை வைத்துள்ளது. தீர்ப்பினை காலம் தாழ்த்தும் செயலாகும் என்றும் சி.வி. சண்முகம் கூறினார்.
அதிமுகவை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படும் திமுகவின் எண்ணத்துக்கு ஆதரவாக தினகரன் செயல்படுகிறார் என்றும் அமைச்சர் சண்முகம் தெரிவித்தார்.