உத்தரப் பிரதேசத்தில் வரும் பிப்ரவரி 10-ம் தேதி முதல் 7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.
பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் கட்சிகள் தனித்தனியே களம் காண்கின்றன. இந்தியாவின் மிகப்பெரிய மாநிலத்தை யார் வெல்ல இருக்கிறார்கள் என பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதால் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது. அதுமட்டுமின்றி இதில் வெல்லப்போவது பாஜகவா ? அல்லது சமாஜ்வாதியா ? என்ற எதிர்பார்ப்பு எழுந்து இருக்கிறது.
இந்நிலையில் உபி முதல்வரும், பாஜகவின் முதல்வர் வேட்பாளருமான யோகி ஆதித்யநாத், ‘முலாயம் சிங் யாதவின் மருமகள் அபர்ணா யாதவ் பாஜக-வில் இணைந்துள்ளதை வரவேற்கிறேன். தேசத்தின் முன்னேற்றத்தின் மீது பிரதமர் மோடி கொண்டுள்ள பார்வையை கண்டு அபர்ணா அவரை பின்பற்றும் நோக்கில் பாஜக.வில் இணைந்துள்ளார். ஆளும் பாஜக அரசுக்கு எதிரான சூழல் இங்கு இல்லை. 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளை பாஜக கைப்பற்றும்.
மார்ச் 10ஆம் தேதி அன்று வெளியாக உள்ள தேர்தல் முடிவு, சமாஜ்வாதி கட்சிக்கு அவமானகரமான தோல்வியாக அமையும். தேர்தலில் ஆதாயம் பெறுவதற்காக குடும்ப அரசியலில் ஈடுபட்டு வரும் அகிலேஷ் யாதவ் சாதி மற்றும் மதத்தை பயன்படுத்தி வருகிறார். குற்றவாளிகளுக்கும், குண்டர்களுக்கும் அவர் தேர்தலில் போட்டியிட சீட் கொடுத்துள்ளார்’ என்று பேசினார்.