மத்திய அரசின் அதிரடியால் ஆட்டம் காணும் மாநில அரசுகள்

First Published Jul 7, 2018, 12:36 PM IST
Highlights
union government appointed ias officers to review various scheme execution


மத்திய அரசின் திட்டங்கள், மாநிலங்களில் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை நேரடியாக களத்திற்கு சென்று ஆராய 800 ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையிலான குழுக்களை மத்திய அரசு நியமித்துள்ளது. மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கையால் மாநில அரசுகள் அதிருப்தி அடைந்துள்ளன. 

ஜன் தன் யோஜனா, சுகன்யா சம்விருத்தி யோஜனா, ஸ்வாஸ்த்ய யோஜனா, முத்ரா யோஜனா, ஜீவன் ஜோதி பீமா யோஜனா உள்ளிட்ட 7 மத்திய அரசின் திட்டங்களை நாடு முழுவதும் அனைத்து கிராமங்களிலும் நிறைவேற்றும் செயலில் மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஆனால் இந்த திட்டங்களை மாநில அரசுகள் முழுமையான அளவில் செயல்படுத்தாமல் சுணக்கம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

அதனால் இத்திட்டங்களை மாநில அரசுகள் முறையாக செயல்படுத்துகின்றனவா என்பதை கண்காணிக்க மத்திய அரசு ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையிலான குழுக்களை அமைத்துள்ளது. 800 ஐஏஎஸ் அதிகாரிகளின் தலைமையில் இந்த குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 117 மாவட்டங்களில் 49,178 கிராமங்களில் இந்த குழுக்கள் நேரடி கள ஆய்வு நடத்த உள்ளன. 

அடுத்த இரண்டு மாதங்களில் இந்த ஆய்வை நடத்த உள்ளனர். கிராம வாரியாக நேரில் சென்று திட்டத்தின் பயனாளர்கள், கிராம மக்களுடன் இணைந்து கூட்டங்கள் நடத்தி, ஆய்வு செய்ய உள்ளனர். மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கை, மத்திய-மாநில அரசுகளுக்கு இடையிலான உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தை கேள்விக்குறியாக்கும் முயற்சி என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்னர்.

ஏற்கனவே பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் ஆளுநரின் மூலமாக மத்திய அரசு மறைமுக ஆட்சி செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவரும் நிலையில், மத்திய அரசின் இந்த நடவடிக்கை, எதிர்க்கட்சிகளிடையேயும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மாநில சுயாட்சிக்கு விடுக்கப்படும் சவாலாக எதிர்க்கட்சியினர் இதை பார்க்கின்றனர். 
 

click me!