உருப்படியான எந்த அறிவிப்பும் இல்லாத உதவாக்கர பட்ஜெட்... மோடியை மோசமாக விமர்சித்த திருமாவளவன்..!

By vinoth kumarFirst Published Feb 2, 2020, 11:59 AM IST
Highlights

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பாஜக அரசின் நிதிநிலை அறிக்கை அதலபாதாளத்தில் சரிந்துகிடக்கும் இந்தியப் பொருளாதாரத்தை மீட்பதற்கான எந்த ஒரு முயற்சியையும் கொண்டிருக்கவில்லை. வெற்றுச் சவடால்களைக் கொண்ட அலுப்பூட்டும் அலங்கார உரையாகவே இந்த பட்ஜெட் உரை அமைந்திருக்கிறது. வார்த்தை ஜாலங்களை வைத்தே மக்களை ஏமாற்றலாம் என மோடி அரசு நம்புகிறது என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

சூரியசக்தி மூலம் இயங்கும் பம்பு செட்டுகள் 20 லட்சம் விவசாயிகளுக்கு ஏற்படுத்தித் தரப்படும் என்பது தவிர, வேறு உருப்படியான எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ''நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பாஜக அரசின் நிதிநிலை அறிக்கை அதலபாதாளத்தில் சரிந்துகிடக்கும் இந்தியப் பொருளாதாரத்தை மீட்பதற்கான எந்த ஒரு முயற்சியையும் கொண்டிருக்கவில்லை. வெற்றுச் சவடால்களைக் கொண்ட அலுப்பூட்டும் அலங்கார உரையாகவே இந்த பட்ஜெட் உரை அமைந்திருக்கிறது. வார்த்தை ஜாலங்களை வைத்தே மக்களை ஏமாற்றலாம் என மோடி அரசு நம்புகிறது என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

இந்தியாவின் ‘ஜிடிபி’ முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் இந்திய பொருளாதாரத்தைச் சரிவிலிருந்து மீட்பதற்கான நடவடிக்கைகள் குறித்து பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பரவலாகக் காணப்பட்டது. ஆனால், பெருத்த ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. விவசாயத்துறைக்கென 16 அம்சத் திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன் அறிவித்திருக்கிறார். சூரியசக்தி மூலம் இயங்கும் பம்பு செட்டுகள் 20 லட்சம் விவசாயிகளுக்கு ஏற்படுத்தித் தரப்படும் என்பது தவிர, வேறு உருப்படியான எந்த அறிவிப்பும் அதிலில்லை. வழக்கம்போல விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என்று வாக்குறுதி மட்டுமே இந்த ஆண்டும் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் ஜிடிபியில் விவசாயத்தின் பங்கு 2 % என்ற அளவுக்குக் குறைந்துள்ளது. இந்நிலையில், விவசாயத் துறையைக் காப்பாற்றுவதற்கென்று எந்தவொரு சிறப்புத் திட்டத்தையும் பாஜக அரசு அறிவிக்காதது அதிர்ச்சியளிக்கிறது.

பொதுத்துறை நிறுவனங்களைத் தொடர்ந்து தனியாருக்கு விற்று வரும் மோடி அரசு இந்த ஆண்டு எல்ஐசியின் பங்குகளையும் விற்கப் போவதாக இந்த பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறது. எல்ஐசியில் முதலீடு செய்திருக்கிற கோடிக்கணக்கான நடுத்தர வர்க்க மக்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் அச்சத்தை உருவாக்கியிருக்கும் என்பதுடன், அந்நிறுவனத்தில் பணியாற்றும் லட்சக்கணக்கான ஊழியர்களின் எதிர்காலமும் இப்போது கேள்விக்குள்ளாகி இருக்கிறது. இந்த அறிவிப்பை மோடி அரசு திரும்பப் பெற வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

மோடி அரசு கடந்த ஆண்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ‘வரிச்சலுகை’ வழங்கியது. அதனால் பொருளாதாரத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்பட்டுவிடவில்லை. ஆனால் இந்த ஆண்டும் அதேபோல கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை வழங்கப்பட்டிருக்கிறது. இது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மோடி அரசு காட்டும் நன்றி- விசுவாசத்தை வெளிப்படுத்துகிறது. வருமான வரி செலுத்தும் நடுத்தர வர்க்கத்தினருக்குக் குறைந்த அளவிலாவது கருணை காட்டும்; சலுகை வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மாறாக, புதிதாக வரி செலுத்தும் முறையை அறிவித்திருக்கும் நிதியமைச்சர், ‘பழைய முறையும் தொடரும், புதிய முறையும் இருக்கும், எதை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம்’ என்று கூறியிருக்கிறார். புதிய முறைக்கு போனால் முன்பிருந்த வசதிகள் இருக்காது என்ற எச்சரிக்கையையும் அவர் தெரிவித்திருக்கிறார். கணக்கிட்டுப் பார்க்கும்போது பழைய முறையே நலம் பயக்கும் என்பதாகத் தெரிகிறது. எனவே, இந்த அறிவிப்பு நடுத்தர வர்க்கத்தினரை நம்ப வைத்து ஏமாற்றுவதாக உள்ளது.

அரசு மற்றும் பொதுத்துறை வங்கிகளில் ஊழியர் பணிகளில் சேர்வதற்கு தேசிய அளவில் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு அதன் மூலம் நியமனங்கள் மேற்கொள்ளப்படும் என்ற புதிய அறிவிப்பு இந்த பட்ஜெட்டில் சொல்லப்பட்டிருக்கிறது. மாநில அரசு ஊழியர்களையும் தேசிய அளவிலான தகுதித் தேர்வு நடத்தித் தேர்வு செய்வது என்றால் அது மாநில அரசின் அதிகார வரம்புக்குள் தலையிடுவதாகும். எனவே இதை தமிழக அரசு ஏற்கக்கூடாது என வலியுறுத்துகிறோம். மொத்தத்தில் இது அடித்தட்டு மக்களுக்கு விரோதமான பட்ஜெட். இந்தியாவை மென்மேலும் நெருக்கடிக்குள் ஆழ்த்தப்போகும் பட்ஜெட்'' என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

click me!