திமுகவைப் பார்த்து வயிற்றெரிச்சல்.... விமர்சனங்களுக்கு ‘செயல்’ மூலம் பதில்... அப்பாவை முதல்வராக்க உதயநிதி ஸ்டாலின் சபதம்!

By Asianet TamilFirst Published Jul 20, 2019, 9:17 PM IST
Highlights

நாற்பதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இளைஞரணிக்கு இலக்கு என்பது ஒன்றுதான். தமிழ்நாட்டில் தலைவர் மு.க. ஸ்டாலினின் ஆட்சியை மலர வைப்பதே. அந்த இலக்கை அடைய இரவு பகல் பாராது உழைக்க கிளம்பியிருக்கும் இளம்படையினருக்கு எனது இதயப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
 

இன்று பலருக்கும் திமுகவைப் பார்த்தால், வயிற்றெரிச்சல். பொதுவாழ்வில் ஈடுபடுவோருக்கு விமர்சனங்கள் என்பவை உரம் போன்றவை. மனதை திடப்படுத்துபவை என்று திமுக இளைஞரணி செயலாளர் உதய நிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை  ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 
“நாங்கள் நடந்து கொண்டே இருப்போம்;
எங்கள் கால்கள் நடையை நிறுத்தா.
நாங்கள் எழுதிக் கொண்டே இருப்போம்;
எங்கள் கைகள் எழுதுவதை நிறுத்தா.
நாங்கள் பேசிக் கொண்டே இருப்போம்;
எங்களுடைய உதடுகளும் நாவுகளும் பேசுவதை நிறுத்தா.
காரணம், நாங்கள் ஆழமான கொள்கைக்கு சொந்தக்காரர்கள். நாங்கள் பெரியாரின் தொண்டர்கள்.
அறிஞர் அண்ணாவின் தம்பிமார்கள்.
அந்த தொண்டர் படையிலே தான்,
அந்த தம்பிமார்களின் வரிசையிலே தான்,
இன்று இளைஞரணியும் சேர்ந்திருக்கிறது.’’ என்று எழுதினார் கலைஞர்.


1980-ம் ஆண்டு ஜூலை திங்கள் 20-ம் நாள், மதுரை ஜான்சி ராணி பூங்கா திடலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணியை கலைஞர் தொடங்கி வைத்தார். இயக்கத்தின் இதயமாக சொல்லப்படும் இளைஞரணி தொடங்கப்பட்டு 40 ஆண்டுகள் ஆகிவிட்டது. நாற்பதாவது ஆண்டை இளைஞரணி தொடும்போது, அதன் செயலாளர் பொறுப்பை சுமக்கும் கடமை, எனக்குக் கிடைத்திருப்பதை நினைத்து, ஒரு பக்கம் பெருமைப்படுகிறேன். இன்னொரு பக்கம் மலைப்பாகவும் இருக்கிறது. பெருமைக்கு என்ன காரணம் என்பதை சொல்லத் தெரியவில்லை. கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் இருந்து செயல்பட்ட பொறுப்பு இது. இதைவிட பெருமை எனக்கு என்ன வேண்டும்?
ஏன் மலைப்பாக இருக்கிறது என்றால், கடந்த 40 ஆண்டு காலமாக இளைஞரணியை கட்டுக்கோப்புடன் வழிநடத்தி, பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை செதுக்கி, அசைக்க முடியாத கற்கோட்டையாக உருவாக்கிக் கொடுத்துள்ளார். அதனை மேலும் கட்டிக்காக்கும் பொறுப்பு, என் கையில் வந்து சேர்ந்துள்ளது.


தளபதி மு.க. ஸ்டாலின், மரியாதைக்குரிய வெள்ளக்கோயில் சுவாமிநாதன் இளைஞரணியை நடத்திச் சென்று, எனக்கு வழிகாட்டியிருக்கிறார்கள். இவர்களது வழிகாட்டுதலுடனும் இளைஞரணி துணைச் செயலாளர்கள் ஒத்துழைப்புடனும் எனது பயணம் தொடங்குகிறது. தி.மு.க என்ற இயக்கமே, இளைஞர்களுக்காக இளைஞர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம்தான். 1949-ம் ஆண்டு கழகம் தொடங்கப்பட்டபோது,  அண்ணா வயது 40. கலைஞர் வயது 25. கழகப் பொதுச்செயலாளர் பேராசிரியரின் வயது 27. இப்படி ஒவ்வொரு முன்னணியினரையும் வரிசைப்படுத்த முடியும். அதனால்தான், இளைஞர்களால் உருவாக்கப்பட்ட இளைஞர் இயக்கம் என்கிறேன்.
இந்த இளைஞர் சக்திதான், கொட்டும் மழையில் உருவான இயக்கத்தை நாடு முழுவதும் வளர்த்து அசைக்க முடியாத ஆலமரமாக காட்சியளிக்க வைத்துள்ளது. இயக்கத்தின் வேர் ஆழமானது. கிளைகள் விரிந்து பரந்தது. யாராலும் எளிதில் அசைக்க முடியாதது. அதனால் தான், இன்று பலருக்கும் நம் கழகத்தைப் பார்த்தால், வயிற்றெரிச்சல். பொதுவாழ்வில் ஈடுபடுவோருக்கு விமர்சனங்கள் என்பவை உரம் போன்றவை. மனதை திடப்படுத்துபவை. இந்த விமர்சனங்களுக்கான ஒரே பதில், ‘செயல்’ மட்டுமே என்று தளபதி ஸ்டாலின் அடிக்கடி சொல்வார்கள். அந்த அடிப்படையில் எங்களது இளைஞரணி தனது அர்ப்பணிப்புடன் கூடிய செயல்பாட்டின் மூலமாக இந்த விமர்சனங்களை எதிர்கொண்டு வெற்றியை நோக்கிச் செல்வோம்.


நாற்பதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இளைஞரணிக்கு இலக்கு என்பது ஒன்றுதான். தமிழ்நாட்டில் தலைவர் மு.க. ஸ்டாலினின் ஆட்சியை மலர வைப்பதே. அந்த இலக்கை அடைய இரவு பகல் பாராது உழைக்க கிளம்பியிருக்கும் இளம்படையினருக்கு எனது இதயப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இளைஞரணியின் அலுவலகம் செயல்படுவது ‘அன்பகம்’
கழகத்தின் தலைமையகம் செயல்படுவது ‘அறிவாலயம்’
அன்பும் அறிவும் நம் இரு கண்கள்.
நாம் நடந்து கொண்டே இருப்போம். இளைஞரணியின் தொடக்க விழாவின்போது, “ ஆழமான கொள்கைக்குச் சொந்தக்காரர்கள், பெரியாரின் தொண்டர்கள், அண்ணாவின் தம்பிகள்’’ என்ற மூன்று அடையாளங்களை கலைஞர் சொன்னார். 40 ஆண்டுகள் கழிந்த நிலையில், மேலும் இரண்டு அடையாளங்கள் கிடைத்துள்ளது நமக்கு. நாம், “கலைஞரின் கண்மணிகள், தளபதியின் தளபதிகள்’’. நாம் நடந்து கொண்டே இருப்போம்!
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

click me!