எங்க சமுதாய ஒட்டு வாங்கி ஜெயிச்சிட்டு எங்க ஆளுங்களயே ஒழிச்சது ஏன்? திமுகவை நோக்கி பாமகவின் பகிரங்க கேள்விகள்...

By sathish kFirst Published Jul 20, 2019, 6:55 PM IST
Highlights

திமுக என்கிற கட்சி தமிழ்நாட்டில் முதன்முதலில் பெரு வெற்றிபெறவும், ஆட்சி அமைக்கவும் ஆதரவாக இருந்த சமூகம் வன்னியர் சமூகம் தான். இந்த சமூகத்திற்கு திமுக துரோகம் செய்தது ஏன்? என திமுகவை நோக்கி பாமக கேள்வியெழுப்பியுள்ளது.
 

திமுக என்கிற கட்சி தமிழ்நாட்டில் முதன்முதலில் பெரு வெற்றிபெறவும், ஆட்சி அமைக்கவும் ஆதரவாக இருந்த சமூகம் வன்னியர் சமூகம் தான். இந்த சமூகத்திற்கு திமுக துரோகம் செய்தது ஏன்? என திமுகவை நோக்கி பாமக கேள்வியெழுப்பியுள்ளது.

இதுகுறித்து பாமக தரப்பில் வெளியான அறிக்கையில்; வன்னியர்களின் 1950 அரசியல் வரலாறு, சுதந்திர இந்தியாவில் வன்னியர்களுக்கு அரசியல் சட்ட உருவாக்க சபையில் இடம் அளிக்கப்படவில்லை. பத்துலட்சம் மக்களுக்கு ஒரு அரசியல் சபை உறுப்பினர் என்கிற காங்கிரசு கட்சி அறிவிப்பை நம்பி, வன்னியர்களுக்கு 3 உறுப்பினர் இடம் வேண்டும் என்று வன்னியர்கள் தில்லிக்கு தூது சென்றனர். ஆனால், காங்கிரசு கட்சி ஒரு இடம் கூட கொடுக்கவில்லை. வன்னியர்களுக்கு மட்டுமல்ல, இந்திய மக்கள் தொகையில் பாதிக்கும் கூடுதலாக இருக்கும் இதர பிற்படுத்தப்பட்ட (OBC) பிரிவினரில் ஒரே ஒருவருக்கு கூட இடம் கொடுக்கவில்லை.

காங்கிரசுக் கட்சி வன்னியர்களைப் புறக்கணித்தது. இதனால் - விடுதலைக்கு காரணமான காங்கிரசுக் கட்சியை, இந்திய வரலாற்றில் முதல் முறையாக 1949 ஆம் ஆண்டின் உள்ளாட்சித் தேர்தலில் வன்னிய குல சத்திரிய மகா சங்கம் தோற்கடித்தது. (தென்னார்க்காடு ஜில்லா போர்டு தேர்தலில் மொத்தமிருந்த 52 இடங்களில் 22 இடங்களை சங்கம் கைப்பற்றியது).

1950 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த இந்திய அரசியல் சாசனம் - சாதி அமைப்புகள் தேர்தலில் போட்டியிட தடை செய்ததால் - 1952 தேர்தலில் வடார்க்காடு வன்னியர்கள் 'காமன்வீல் கட்சி' என்ற பெயரிலும், தென்னார்க்காடு வன்னியர்கள் 'தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி' என்ற பெயரிலும் போட்டியிட்டு பெரும் வெற்றி பெற்றனர்.

(அப்போதைய 190 சட்டமன்ற உறுப்பினர் இடங்களில் 25 இடங்களை வன்னியர் கட்சிகள் கைப்பற்றின. இதனால், சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலிலேயே, சென்னை மாநிலத்தில் காங்கிரசுக் கட்சி தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலையை சந்தித்தது).

காமன்வீல் கட்சி ராஜாஜியை முதலமைச்சர் ஆக்கியது. பின்னர் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி காமராசரை முதலமைச்சர் ஆக்கியது. (காங்கிரசுக் கட்சியின் வேண்டுகோளுக்கு இணங்க, வன்னியர் கட்சிகள் இரண்டையும் கலைத்துவிட்டனர்)

வன்னியர்கள் திமுகவை வளர்த்த வரலாறு

காங்கிரசை வெறுத்த வன்னியர் சமூகம் - திமுகவை வளர்த்தது. தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி சட்டமன்ற உறுப்பினரும் வன்னியர் தலைவருமான ஆ. கோவிந்தசாமி 1954 ஆம் ஆண்டில் 'உழவர் கட்சி' எனும் கட்சியைத் தோற்றுவித்தார். அவர் 1954 ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் காணை, கஞ்சனூர் தொகுதியில் உதயசூரியனை தேர்தல் சின்னமாக வைத்து போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

பின்னர் அவரது தலைமையில் வன்னியர்கள் திமுகவில் சேர்ந்தனர். திமுக உதய சூரியன் சின்னத்தை எடுத்துக்கொண்டது. அக்கட்சி முதன் முதலில் போட்டியிட்ட 1957 தேர்தலில் 13 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அவற்றில் 10 தொகுதிகள் வன்னியர்கள் மிகப் பெரும்பான்மையாக வாழும் தொகுதிகளாகும்.

அதன் பின்னர் 1962 தேர்தல் திமுக வெற்றி பெற்ற 50 இடங்களில் மிக அதிகமானவை வன்னியர்கள் வாழும் தொகுதிகள் ஆகும். இதனை Myron Weiner எனும் அரசியல் ஆய்வாளர் தனது Politics of Scarcity நூலில் "In the 1962 elections for the Madras Legislative Assembly, a large number of Vanniyakula Kshatriyas in North and South Arcot, Trichinopoly, Tanjore and Salem supported the DMK. It was in these districts that the DMK registered most of its gains" என்று குறிப்பிட்டுள்ளார்.

இறுதியில் 1967 ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைத்த போதும் கூட - மிக அதிகமான இடங்களை வெற்றி கொண்டது வன்னியகள் ஆதரவுடன் தான்.

வன்னியர்களுக்கு திமுக செய்த துரோகம்

இவ்வாறாக, திமுக என்கிற கட்சி தமிழ்நாட்டில் முதன்முதலில் வெற்றிபெறவும், ஆட்சி அமைக்கவும் ஆதரவாக இருந்த வன்னியர் சமூகத்திற்கு திமுக செய்த நன்மைகள் என்ன? சாதாரண கட்சி மாவட்டச் செயலாளர் பதவிகளைக் கூட விகிதாச்சாரத்துக்கு ஏற்ப வன்னியர்களுக்கு கொடுக்காதது ஏன்?

மிகவும் குறைந்த பட்ச நீதியான - வன்னியர் சமூகம் உள்ளிட்ட 108 சமூகங்களுக்கு 20% இடஒதுக்கீடு பெறுவதற்கு கூட - மருத்துவர் அய்யா அவர்களின் போராட்டத்தின் மூலம் "21 உயிர்களை தியாகம் செய்த பின்னர் தான் திமுகவிற்கு மனம் இறங்கும்" என்கிற நிலை ஏற்பட்டது ஏன்?

வன்னியர்களின் அடையாளமான ராமசாமி படையாட்சியாரின் படத்தை, முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வந்து தான் சட்டமன்றத்தில் திறக்க வேண்டும் என்கிற சூழலை திமுக உருவாக்கியது ஏன்? கலைஞர் கருணாநிதிக்கோ, முக ஸ்டாலினுக்கோ இந்த எண்ணம் எழாதது ஏன்? என கேள்வியெழுப்பியுள்ளார்.

tags
click me!